இந்த ஆண்டு RTE மாணவர்கள் சேர்ப்பதில் கடும் போட்டி....!

 இந்த ஆண்டு  RTE  மாணவர்கள் சேர்ப்பதில் கடும் போட்டி....!

இலவச மற்றும் கட்டாய கல்வி சட்டத்தின் கீழ் தனியார் பள்ளிகளில் மாணவர் சேர்க்கைக்கான ஆன்லைன் பதிவு கடந்த 20ஆம் தேதி துவங்கிய நிலையில், 10 நாட்களுக்குள்ளாக 80,000 பேர் விண்ணப்பித்திருப்பதாக தனியார் பள்ளிகள் இயக்குனர் நாகராஜ முருகன் தெரிவித்துள்ளார்.

மத்திய அரசின் இலவச மற்றும் கட்டாயக் கல்விச் சட்டத்தின் அடிப்படையில், சிறுபான்மையினர் அல்லாதவர் நடத்தக்கூடிய தனியார் பள்ளிகளில் ஆரம்ப நிலை வகுப்பில் உள்ள மொத்த இடங்களில் 25 விழுக்காடு இடங்கள் ஏழை, எளிய பொருளாதாரத்தில் நலிந்த பிரிவினரின் குழந்தைகளுக்கு ஒதுக்கீடு செய்ய வேண்டும் என சட்டத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த இட ஒதுக்கீட்டில் சேரும் மாணவர்கள் எட்டாம் வகுப்பு வரை  கல்வி பயிலலாம்.

தமிழகத்தில் 8,000 தனியார் பள்ளிகளில், 88,000இடங்கள் உள்ள நிலையில், இதற்கான ஆன்லைன் பதிவு கடந்த 20ஆம் தேதி துவங்கியது. 10 நாட்களில் 80,000 பேர் பதிவு செய்திருப்பதாக தனியார் பள்ளிகள் இயக்குனர் நாகராஜ முருகன் தெரிவித்துள்ளார். மே 18ஆம் தேதி வரை பதிவு செய்வதற்கு கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளதால் இன்னும் ஏராளமானவர்கள் இதில் விண்ணப்பிக்க வாய்ப்பு உள்ளது. கடந்த ஆண்டைக் காட்டிலும் ஒவ்வொரு பள்ளியிலும் அதிகமானவர்கள் விண்ணப்பம் கொடுத்து வருவதால் இவர்களை தேர்வு செய்வதில் பெரிய போட்டி ஏற்படும் என்று தெரிகிறது.