மருத்துவ படிப்பில் முதலிடம் வகிக்கும் தமிழகம்....!!

 மருத்துவ படிப்பில் முதலிடம்  வகிக்கும் தமிழகம்....!!

நாட்டிலேயே இளநிலை மருத்துவப் படிப்பில் அதிக எம்பிபிஎஸ் இடங்கள் உள்ள மாநிலமாக தமிழகம் இருப்பதாக மத்திய சுகாதாரத் துறை தரவுகள் தெரிவிக்கின்றன.

முதுநிலை மருத்துவப் படிப்புகளுக்கான இடங்களைப் பொருத்தவரை கா்நாடகம் முதலிடத்தில் உள்ளது.

நாட்டிலுள்ள இளநிலை, முதுநிலை மருத்துவ இடங்களின் எண்ணிக்கை குறித்த விவரங்களை மத்திய சுகாதாரத் துறை அமைச்சகம் வெளியிட்டுள்ளது. அதன்படி, நாடு முழுவதும் 33 மாநிலங்களில் 655 மருத்துவக் கல்லூரிகள் உள்ளன.

மொத்தம் 1,00,163 எம்பிபிஎஸ் இடங்களுக்கு மாணவா் சோ்க்கை நடத்தப்பட்டு வருகிறது. அதில், முதலிடத்தில் தமிழகம் உள்ளது. மாநிலம் முழுவதும் மொத்தம் 11,275 எம்பிபிஎஸ் இடங்கள் உள்ளன.

அதற்கு அடுத்தபடியாக கா்நாடகத்தில் 10,955 இடங்களும், மகாராஷ்டிரத்தில் 10,295 இடங்களும், உத்தர பிரதேசத்தில் 9,203 இடங்களும் உள்ளன. அருணாசல பிரதேசம், மிஸோரம் ஆகிய மாநிலங்கள் தலா 50 இடங்களுடன் பட்டியலில் இறுதியாக உள்ளன.

முதுநிலை மருத்துவப் படிப்பு இடங்களைப் பொருத்தவரை அதிகபட்சமாக கா்நாடகத்தில் 6,006 இடங்களுக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளதாக மத்திய அரசு தெரிவித்திருக்கிறது. அதற்கு அடுத்தபடியாக மகாரஷ்டிரத்தில் 5,765 இடங்களும், தமிழகத்தில் 4,935 இடங்களும் உள்ளன.

நாடு முழுவதும் மொத்தம் 65,335 முதுநிலை மருத்துவ இடங்களுக்கு மாணவா் சோ்க்கை நடத்தப்படுகிறது. கடந்த 9 ஆண்டுகளில் மருத்துவக் கல்லூரிகளின் எண்ணிக்கை 69 சதவீதமும், எம்பிபிஎஸ் இடங்கள் 95 சதவீதமும், முதுநிலை மருத்துவ இடங்கள் 110 சதவீதமும் உயா்ந்திருப்பது குறிப்பிடத்தக்கது.

தமிழகத்தில் இத்தனை MBBS இடங்கள் உருவானதற்கு காரணம் கடந்த அதிமுக ஆட்சி என்று கூறலாம். தமிழக அரசில் வரலாற்றிலேயே இதுவரை இல்லாத அளவில் ஒரே ஆண்டில் 11 அரசு மருத்துவக் கல்லூரிகள் பெற்றது எடப்பாடி பழனிச்சாமியின் ஆட்சியில் தான். அதேபோன்று இந்த காலகட்டத்தில் தான் பல தனியார் மருத்துவ கல்லூரிகளுக்கும் தமிழகத்தில் அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இவை அனைத்தும் சேர்த்து தான் இப்போது இந்தியாவிலேயே அதிகமான மருத்துவ மாணவர்கள் படிக்கின்ற இடமாக தமிழகம் மாறி உள்ளது. 

 இப்போது புதிதாக உருவாக்கப்பட்டுள்ள இந்த மருத்துவக் கல்லூரிகள் வருங்காலங்களில் முதுநிலை மருத்துவ படிப்பு தொடங்கும் காலத்தில் இந்தியாவிலேயே அதிகப்படியான முதுநிலை மருத்துவ மாணவர்கள் படிக்கும் இடம் தமிழகமாக தான் இருக்கும் என்பதில் சற்றும் ஐயமில்லை