1,200 கர்ப்பிணி பெண்களுக்கு சமுதாய வளைகாப்பு நிகழ்ச்சி

1,200 கர்ப்பிணி பெண்களுக்கு சமுதாய வளைகாப்பு நிகழ்ச்சி


 *1,200 கர்ப்பிணி பெண்களுக்கு சமுதாய வளைகாப்பு நிகழ்ச்சி : சீர் வரிசைகள் வழங்கி, சந்தனம் குங்குமம் பூசி, அட்சதை தூவி வாழ்த்து*

தேன்கனிக்கோட்டை  அருகே உள்ள கெலமங்கலத்தில் அரசு ஆரம்ப சுகாதார நிலையம் சார்பில் 1,200 கர்ப்பிணி பெண்களுக்கு சமுதாய வளைகாப்பு திருவிழா நடைபெற்றது. 

கெலமங்கலம் வட்டார மருத்துவ அலுவலர் ராஜேஷ் குமார் ஏற்பாட்டில் நடைபெற்ற இந்த சமுதாய வளைகாப்பு நிகழ்ச்சியில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் சட்டமன்ற குழு தலைவரும், தளி சட்டமன்ற உறுப்பினருமான டி.இராமச்சந்திரன் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு 1,200 கர்ப்பிணி பெண்களுக்கு புடவை, வலையல், மஞ்சள், குங்குமம் உள்ளிட்ட சீர் வரிசைகளை வழங்கினார். அதனைத்தொடர்ந்து கர்ப்பிணி பெண்களுக்கு அனைவரும் சந்தனம் குங்குமம் பூசி, அட்சதை தூவி வாழ்த்தினர். 

இதில் கெலமங்கலம், உனிசெட்டி, பெட்டமுகிலாளம், தடிக்கல், ராயக்கோட்டை, நாகம்ங்கலம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இருந்தும், பல்வேறு மலை கிராமங்களில் இருந்தும் கர்ப்பிணி பெண்கள் பாதுகாப்பாக அழைத்து வரப்பட்டனர். அவர்களுக்கு அறுசுவை விருந்து பரிமாறப்பட்டது. அனைவரும் வயிறார உணவு அருந்திய பின் மருத்துவத்துறையினர் அனைவரையும் பாதுகாப்பாக வீடுகளுக்கு அழைத்து சென்றனர்.

இதில் பேசிய சட்டமன்ற உறுப்பினர் டி இராமச்சந்திரன், மலை கிராமங்களில் வாழும் பொதுமக்கள் குழந்தை திருமணங்களை நடத்தக்கூடாது, 18 வயது நிரம்பிய பெண்களுக்கு திருமணம் செய்து வைக்க வேண்டும், பெண் சிசுக்கொலைகளை தடுக்க வேண்டும், பெண் பிள்ளைகளை உயர்கல்வி படிக்க வைக்க வேண்டும் அதற்கான அனைத்து வசதிகளும் உள்ளது என தெரிவித்தார். இந்நிகழ்ச்சியில் மருத்துவர்கள் கோபி,  அனிஷ் பர்வின், பிராபாவதி, சபரிநாதன், சக்திவேல்,  மருத்துவமனை கண்காணிப்பாளர் ராஜா. வட்டார மேற்பார்வையாளர் சேகர், சுந்தரம் சுகாதார ஆய்வாளர்கள், கிராம சுகாதார செவிலியர்கள் மற்றும் ஏராளமான பொதுமக்கள் கலந்துகொண்டனர்.

B. S. Prakash