ஆசிரியர்களுக்கு எதிராக குற்றம் சாட்டக் கூடாது - உயர்நீதிமன்றம்*

 ஆசிரியர்களுக்கு எதிராக குற்றம் சாட்டக் கூடாது - உயர்நீதிமன்றம்

தங்களது பிள்ளைகள் மீதான கடமையையும், பொறுப்பையும் உணர்ந்து, வீட்டிலும் சமூகத்திலும் பிள்ளைகளை பாதுகாத்து, கண்காணிப்பது பெற்றோரின் கடமை" என சென்னை உயர் நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது.

நீலகிரி மாவட்டம் கூடலூரில் உள்ள அரசு மேல்நிலைப் பள்ளியில் 12-ம் வகுப்பு படித்த யுவராஜ் கடந்த 2017-ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் தற்கொலை செய்து கொண்டார். மாணவனின் தலைமுடியை வெட்டியும், கால்சட்டையை கிழித்தும் தலைமை ஆசிரியர் துன்புறுத்தியதால்தான், தன் மகன் தற்கொலை செய்து கொண்டதாகக் கூறி, தலைமை ஆசிரியர் மீது நடவடிக்கை எடுக்கவும், 10 லட்ச ரூபாய் இழப்பீடு வழங்கவும் தமிழக அரசுக்கு உத்தரவிடக் கோரி மாணவனின் தாய் கலா கடந்த 2018-ம் ஆண்டு சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார்.

இந்த வழக்கு நீதிபதி எஸ்.எம்.சுப்ரமணியம் முன் விசாரணைக்கு வந்தது. அப்போது அரசு தரப்பில், "மாணவர்கள் ஒழுக்கத்தை கடைபிடிக்கும் வகையில் தலைமை ஆசிரியர் நடந்து கொண்டார். இந்த தலைமை ஆசிரியர் பணியில் இருந்த காலத்தில் பள்ளியின் தேர்ச்சி சதவீதம் 45 சதவீதத்திலிருந்து 90 சதவீதமாக உயர்ந்தது. இந்த புகார் குறித்து மாவட்ட தலைமை கல்வி அதிகாரி நடத்திய விசாரணையில், பெற்றோர் தரப்பு குற்றச்சாட்டுகள் தவறு என அறிக்கை அளிக்கப்பட்டது" என்று தெரிவிக்கப்பட்டது.

அப்போது தலைமை ஆசிரியர் ராபர்ட் தரப்பில், "தற்கொலை செய்து கொண்ட யுவராஜ் ஒவ்வொரு மாதமும் 50 சதவீத நாட்கள் மட்டுமே வகுப்புகளுக்கு வருகை தந்துள்ளார். இந்த வழக்கில் எனக்கு எதிராக சுமத்தப்படும் புகார் பொய்யானது. பணம் பறிக்கும் நோக்கில் இந்த வழக்கு தொடரப்பட்டுள்ளது" என்று வாதிடப்பட்டது.

அனைத்து தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி, "மாணவன் யுவராஜ் தற்கொலை தொடர்பாக மாவட்ட தலைமை கல்வி அதிகாரி மற்றும் காவல் துறை நடத்திய விசாரணையின் அடிப்படையில் பெற்றோரின் குற்றச்சாட்டில் உண்மை இல்லை என்பது நிரூபணமாகியுள்ளது எனக் கூறி, மாணவனின் தாய் தாக்கல் செய்த மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.

மேலும், போதிய ஆதாரங்கள் இல்லாமல் ஆசிரியர் மற்றும் தலைமை ஆசிரியரை குறை கூறுவதை ஏற்க முடியாது. மாணவர்களை ஒழுங்குபடுத்த கல்வித் துறை வகுத்துள்ள விதிகளை மீறும்போதுதான் அவர்களை தண்டிக்க முடியும். ஒரு மாணவன் தற்கொலை செய்து கொண்டால் எவ்வித ஆதாரங்களும் இல்லாத நிலையில் ஆசிரியர்களுக்கு எதிராக குற்றம்சாட்டக் கூடாது. இதுபோன்ற பொதுவான குற்றச்சாட்டால் பள்ளியின் பெயரும், பிற மாணவர்களின் நலனும் பாதிக்கப்படுகிறது.

மாணவர்களை நன்றாக படிக்கச் செய்யவும், ஒழுக்கம் பேணச் செய்யவும் முயற்சிக்கும் ஆசிரியர்களை ஊக்கப்படுத்தாமல் குறை கூறினால், அர்ப்பணிப்பு உணர்வுடன் அவர்கள் தங்களது கடமையை செய்ய மாட்டார்கள். மாணவர்களின் ஒவ்வொரு செயல்பாட்டிற்கும் ஆசிரியர்களை குறைகூற முடியாது. பள்ளி அல்லது ஆசிரியர் மீது குற்றஞ்சாட்டுவதற்கு முன்பாக தங்களது பிள்ளைகள் மீதான கடமையையும், பொறுப்பையும் பெற்றோர்கள் உணர்ந்திருக்க வேண்டும். வீட்டிலும், சமூகத்திலும் தங்களது பிள்ளைகளை பாதுகாத்து, கண்காணிப்பது அவர்களின் கடமை" என்று நீதிபதி பிறப்பித்த உத்தரவில் அறிவுறுத்தி உள்ளார்.