தனியார் பள்ளி மாணவர்களை கண்டுகொள்ளாத தமிழக அரசு....! பட்ஜெட் அறிவிப்புகள் சொல்வது என்ன...?

தனியார் பள்ளி மாணவர்களை கண்டுகொள்ளாத தமிழக அரசு....!  பட்ஜெட் அறிவிப்புகள் சொல்வது என்ன...?

தமிழக சட்டப்பேரவையில் கல்வித்துறை சார்ந்த மானியம் குறித்து நேற்று காலைமுதல் விவாதம் நடைபெற்றது.

அப்போது, பள்ளிக்கல்வி சார்ந்த அறிவிப்புகளை அமைச்சர் அன்பில் மகேஷ் வெளியிட்டார்.. அந்த அறிவிப்பில் அரசு பள்ளி மாணவர்கள் ஆங்கிலத்தில் சரளமாக பேச, படிக்க, எழுத, புரிந்து கொள்ளும் திறனை மேம்படுத்த, ரூ.30 கோடி மதிப்பீட்டில், 6029 அரசு உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில் ஆங்கில மொழி ஆய்வகங்கள் அமைக்கப்படும் என்று அறிவித்துள்ளார். இதைதவிர, அமைச்சர் வெளியிட்ட பல சிறப்பு அறிவிப்புகள் இவைதான்:

ரூ. 150 கோடி மதிப்பீட்டில் 7,500 திறன் வகுப்பறைகள் உருவாக்கப்படும்... 2,713 நடுநிலை பள்ளிகளில் உயர்தொழில்நுட்பக் கணினி ஆய்வகங்கள் ரூ. 210 கோடியில் அமைக்கப்படும்... பள்ளி வளாகங்கள் தூய்மை செய்யும் பணி, இரவுநேர காவலர்கள் பணி போன்ற பள்ளி பராமரிப்புக்கு ரூ. 100 கோடி மதிப்பில் செயல்படுத்தப்படும்... கல்வி, அறிவியல், விளையாட்டு உள்ளிட்ட இணைக்கல்வி வசதியுடன் கூடிய உலகத்தரம் வாய்ந்த பள்ளி சென்னையில் ரூ. 7 கோடி மதிப்பில் கட்டப்படும்.

பல்துறை அறிஞர்கள் படித்த பள்ளிகளும், 100 ஆண்டுகளுக்கு மேல் உள்ள பள்ளிகளும் அதன் தனிச் சிறப்பு மாறாமல் இருக்க ரூ. 25 கோடி மதிப்பில் புதுப்பிக்கப்பட்டு நூற்றாண்டு விழா கொண்டாடப்படும்.. 

அரசின் அனைத்து திட்டங்களையும் செயல்படுத்தும் 100 பள்ளிகளின் சிறந்த தலைமையாசிரியர்களுக்கு அறிஞர் அண்ணா தலைமை விருது வழங்குவதுடன் பள்ளிக்கு ரூ. 10 லட்சம் வழங்கப்படும்.. 1,000 அரசுப் பள்ளி ஆசிரியர்களுக்கு ரூ. 3 கோடி மதிப்பீட்டில் தொல்லியல் துறை பயிற்சி அளிக்கப்படும்..

ரூ. 25 கோடி செலவில் நடமாடும் அறிவியல் ஆய்வகங்கள் திட்டம் செயல்படுத்தப்படும்... மாணவர்களின் கலைத் திறன்களை வெளிப்படுத்தும் விதமாக ரூ. 5 கோடி மதிப்பில் கலைத் திருவிழா நடத்தப்படும்..மாநில அளவில் 'ஹேக்கத்தான்' போட்டிகள் நடத்தப்படும்.. அரசுப் பள்ளி மாணவர்களுக்கு செயல்திறனை ஊக்கப்படுத்தும் விதமாக ரூ. 25 லட்சம் செலவில் பள்ளிகளில் காய்கறித் தோட்டம் அமைக்கப்படும்..

தொடக்கப்பள்ளி மாணவர்களுக்கு ஊஞ்சல் இதழ், உயர்கல்வி மாணவர்களுக்கு தேன்சிட்டு இதழ் மாதம் இருமுறை வெளியிடப்படும்.. ஆசிரியருக்காக கனவு ஆசிரியர் இதழ் வழங்கப்படும்... பள்ளிக்கு வர இயலாத 10,146 மாற்றுத் திறனாளி மாணவர்களுக்கு இருப்பிடத்திற்கே சென்று கல்வி வழங்க ரூ. 8.11 கோடி ஒதுக்கீடு உள்ளிட்ட முக்கிய அறிவிப்புகளை வெளியிட்டார்.

ஆனால் தனியார் பள்ளிகளில் படிக்கின்ற மாணவர்களை பற்றி  இந்த பட்ஜெட்டில்  எந்த அறிவிப்பும் வெளியிடப்படவில்லை. அதேபோல் தனியார் பள்ளிகளின் மேம்பாட்டிற்கு எந்த திட்டங்களும் முன்வைக்கப்படவில்லை. Corona காலத்தில் மிகவும் கடுமையான சவால்களை சந்தித்து வந்த பள்ளி நிர்வாகிகளுக்கு மகிழ்ச்சி அளிக்கும் அறிவிப்புகள் வரும் என்று எதிர்பார்த்தோம் எங்களைப் பற்றி தமிழக அரசு துளியும் கவலைப் படவில்லை. பட்ஜெட்டில் எந்த அறிவிப்பும் எங்களுக்கு ஆனதாக இல்லை என்று தனியார் பள்ளி நிர்வாகிகள் வருத்தம் தெரிவித்து வருகின்றனர்.

எங்களை விட்டுவிடுங்கள் நாங்கள் ஏதோ செய்து கொள்கிறோம்.  கடனை உடனை வாங்கியாவது பள்ளிகளை நடத்துகிறோம்  எங்களின் கௌரவத்தை காப்பதற்காக.

  எங்கள் பள்ளிகளில் படிக்கின்ற மாணவர்கள் என்ன பாவம் செய்தார்கள்?  அவர்களும் இந்நாட்டு மன்னர்கள் தானே...?  தமிழ்நாட்டு மாணவர்கள் தானே ...? அவர்களின் வளர்ச்சிக்கு ஏதாவது  அறிவித்திருக்கலாம் இல்லையா என்கிறார்கள்.