5 மாநில தேர்தலால்.. ஸ்டாலினுக்கு வந்த தர்மசங்கடம்! காங்கிரசை கழற்றிவிடும் திட்டமா...?!

 5 மாநில தேர்தலால்.. ஸ்டாலினுக்கு வந்த தர்மசங்கடம்! காங்கிரசை கழற்றிவிடும் திட்டமா...?!

5 மாநில சட்டசபை தேர்தலில் காங்கிரஸ் கட்சியின் படுதோல்வி தமிழ்நாட்டில் திமுக கட்சிக்கு சில தர்மசங்கடங்களை ஏற்படுத்தும் வாய்ப்புகள் உள்ளன. தேசிய அரசியலில் கால் பதிக்க முயன்று வரும் திமுகவிற்கு இது சில நெருக்கடிகளை கொடுக்கும் வாய்ப்புகள் உள்ளன.

தமிழ்நாடு முதல்வர் ஸ்டாலின் தேசிய அரசியலில் கடந்த சில நாட்களாக கவனம் செலுத்தி வருகிறார். முக்கியமாக மாநில முதல்வர்கள் பலர் பாஜகவிற்கு எதிராக தேசிய அளவில் ஒன்று கூட முயன்று கொண்டு இருக்கும் நிலையில் முதல்வர் ஸ்டாலினும் எதிர்கட்சிகளை ஒருங்கிணைக்கும் திட்டத்தில் இருக்கிறார்.

ஏற்கனவே மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி மற்றும் தெலுங்கானா முதல்வர் கே சந்திரசேகர ராவ் இருவரும் எதிர்கட்சித் தலைவர்களை ஒருங்கிணைக்க முயன்று வரும் நிலையில்தான் முதல்வர் ஸ்டாலினும் இதற்கான முயற்சியில் களமிறங்கி உள்ளார்.

இதை மனதில் வைத்தே சமீபத்தில் முதல்வர் ஸ்டாலின் தனது சுயசரிதையான உங்களில் ஒருவன் புத்தக வெளியீட்டு விழாவில் எதிர்கட்சித் தலைவர்களை அழைத்து இருந்தார். இதில் பல்வேறு தலைவர்கள் கலந்து கொண்ட போதும் கூட மம்தா பானர்ஜி, கேசிஆர் போன்றவர்கள் கலந்து கொள்ளவில்லை. இந்த நிகழ்வில் காங்கிரஸ் எம்பி ராகுல் காந்தி முன்னிலை வகித்த காரணத்தால் இந்த இரண்டு தலைவர்களும் அந்த நிகழ்வை புறக்கணித்ததாக கூறப்பட்டது.

மம்தா கண்டிஷன்

முன்னதாக தேசிய அளவிலான கூட்டணி அமைக்க வேண்டும் என்றால் அதில் காங்கிரஸ் இடம்பெறுவதை விரும்ப மாட்டேன் என்று மம்தா கூறி இருந்தார். காங்கிரஸ் எங்கள் கூட்டணியில் இணைய வேண்டும் என்றால் வந்து சேரலாம். ஆனால் அவர்களுக்கு தலைமை பதவிகளை கொடுக்க முடியாது. காங்கிரஸ் தனி பாதையில் செல்ல விரும்பினால் செல்லட்டும். மாநில கட்சிகளான நாங்கள் தனி பாதையில் செல்கிறோம் என்று கூறினார். தேசிய அளவில் மாநில கட்சிகள் அமைக்கும் இந்த கூட்டணியில் காங்கிரஸ் இணைவதை மம்தா விரும்பவில்லை என்கிறார்கள்.

அதேபோல் கேசிஆரும் காங்கிரஸ் வருவதை விரும்பவில்லை என்று கூறப்படுகிறது. காங்கிரஸ் கட்சியுடன் தொடக்கத்தில் இருந்தே இவருக்கு கருத்து வேறுபாடு உள்ளது. தொடக்கத்தில் பாஜக கூட்டணியில் இவர் இருந்தது குறிப்பிடத்தக்கது. தேசிய அளவில் மாநில கட்சிகள் அமைக்கும் கூட்டணியில் இவர் இணைவதை விரும்பவில்லை என்று கூறப்பட்டது. இதன் காரணமாகவே ஸ்டாலின் நடத்திய நிகழ்வில் கேசிஆர் கலந்து கொள்ளவில்லை என்றும் கூறப்பட்டது.

ஆனால் ஸ்டாலின் நெருக்கம்

ஆனால் திமுக தலைவர் ஸ்டாலின் தொடர்ந்து காங்கிரஸ் கட்சியுடன் நெருக்கம் காட்டி வருகிறார். காங்கிரஸ் கட்சிக்கு மேயர் பதவி வழங்கியது. கடந்த தேர்தலில் ராகுல் காந்தியை பிரதமர் வேட்பாளராக அறிவித்தது. புத்தக வெளியீட்டு விழாவில் காங்கிரஸ் எம்பி ராகுல் காந்தியுடன் நெருக்கமாக பேசியது என்று காங்கிரஸ் கட்சியுடன் முதல்வர் ஸ்டாலின் நெருக்கம் காட்டி வருகிறார். ஆனால் 5 மாநில சட்டசபை தேர்தலில் காங்கிரஸ் கட்சியின் படுதோல்வி தமிழ்நாட்டில் திமுக கட்சிக்கு சில தர்மசங்கடங்களை ஏற்படுத்தும் வாய்ப்புகள் உள்ளன.

இனி வாய்ப்பில்லை

காங்கிரஸ் கட்சி பெரும்பாலான மாநிலங்களில் பின்னடைவை சந்தித்துள்ளது. பெரும்பாலான மாநில கட்சிகள் காங்கிரசை புறந்தள்ளிவிட்டது. தற்போது திமுக மட்டுமே காங்கிரசை ஆதரித்து வருகிறது. இனியும் காங்கிரசுக்கு திமுக இதேபோன்ற ஆதரவை கொடுப்பது நடக்குமா என்ற கேள்வி எழுந்துள்ளது. பல்வேறு மாநில கட்சிகள் காங்கிரஸ் கட்சியை சுமையாக கருதும் போது திமுக இனியும் காங்கிரசுடன் கூட்டணியை தொடருமா என்று கேள்வி எழுந்துள்ளது.

இந்த சட்டசபை தோல்வியால் 2024 லோக்சபா தேர்தலில் காங்கிரஸ் கட்சி இல்லாமல் தேசிய அளவில் மாநில கட்சிகளின் கூட்டணி அமையும் வாய்ப்புகள் உள்ளன. காங்கிரஸ் கட்சியை சேர்த்துக்கொள்ள மாநில கட்சிகள் கண்டிப்பாக விரும்பாது. அப்படி இருக்கும் பட்சத்தில் காங்கிரஸ் கட்சியுடன் திமுக தொடர்ந்து கூட்டணியில் இருக்குமா அல்லது தேசிய கூட்டணியில் இணையுமா என்ற கேள்வி எழுந்துள்ளது. காங்கிரஸ் இல்லாத தலைவர்களின் வருகைக்காக கேசிஆர், மம்தா காத்திருக்கும் நிலையில் ஸ்டாலின் கொஞ்சம் தர்மசங்கடமான நிலையில் சிக்கி இருக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.