மஞ்சள் பை இயக்கத்தின் முன்னோடி....!!

மஞ்சள் பை இயக்கத்தின் முன்னோடி....!!

மீண்டும் மஞ்சள் பை” விழிப்புணர்வு இயக்கத்தை முதல்வர் ஸ்டாலின்  தொடங்கி வைத்தார்.

தமிழகத்தில் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பை பயன்பாடு குறித்து மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில், மீண்டும் மஞ்சப்பை திட்டத்தைச் சுற்றுச்சூழல் துறை முன்னெடுத்துள்ளது.

இந்நிலையில் சென்னை கலைவானர் அரங்கில் மஞ்சப்பை விழிப்புணர்வு நிகழ்ச்சியைச் சுற்றுச்சூழல்,காலநிலை மாற்றம் மற்றும் வனத்துறை ஏற்பாடு செய்திருந்தது. இந்நிகழ்ச்சியில் முதலமைச்சர் ஸ்டாலின் கலந்துகொண்டு மீண்டும் மஞ்சப்பை என்ற விழிப்புணர்வு பரப்புரையைத் தொடங்கி வைத்தார்.

நிகழ்ச்சியில் பேசிய முதல்வர், மஞ்சப்பை தான் சுற்றுச்சூழலுக்கு நல்லது. முன்பாக மஞ்சப்பை கொண்டு சென்றாலே பார்க்கிறவர்கள் வீட்டில் எதாவது விஷேசமா, பத்திரிக்கை கொண்டு வந்திருக்கிறீர்களா என்று கேட்ட காலம் உண்டு. ஆனால் பிளாஸ்டிக் பைகள் வந்தவுடன் அதுதான் நாகரிகம், மஞ்சப்பை வைத்திருந்தால் அது கேவலம் என்ற சூழல் உருவானது. மஞ்சப்பை வைத்திருந்தால் பட்டிக்காட்டான் என்று கிண்டல் செய்யக் கூடியவர்களும் உருவானார்கள்.

ஒருமுறை பயன்படுத்தித் தூக்கி எரியும் பிளாஸ்டிக் பைகளால், நிலம், நீர், காற்று என அனைத்துக்கும் பாதிப்பு ஏற்படுகிறது. கடல் வாழ் உயிரினங்கள் பிளாஸ்டிக் பொருட்களை உண்டு அழிந்து வருகின்றன. பிளாஸ்டிக் பைகள் எரிக்கப்படும் போது, அதிலிருந்து டயாக்சின் வேதிப் பொருள் வெளியேறி காற்று நஞ்சாகிறது. அதைச் சுவாசிக்கும் மனிதர்களுக்கு நுரையீரல் பாதிக்கிறது.

இத்தனை பாதிப்புகளை உருவாக்கக் கூடிய பிளாஸ்டிக் பயன்பாட்டை நிறுத்தியாக வேண்டும். இதற்காகத் தமிழக அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. ஒருமுறை பயன்படுத்தித் தூக்கி எரியும் 14 வகையான பிளாஸ்டிக் பொருட்கள் உற்பத்தி, விற்பனைக்குத் தமிழக அரசு தடை விதித்துள்ளது. அதன்படி விதிகளை மீறி பிளாஸ்டிக் பை உற்பத்தி செய்த 130 தொழிற்சாலைகளுக்குச் சீல் வைக்கப்பட்டுள்ளது” என்று தெரிவித்தார்.

இதனால் தற்போது தமிழகத்தில் மஞ்சள் பை பிரபலமடைந்து வருகிறது. ஆனால் இதற்கு முன்பாகவே பலர் மஞ்சள் பை இயக்கத்தை ஒரு அப் பணியாகவே செய்து வருகின்றனர்.

அவர்கள் யாரும் பிரபலம் அடையவில்லை அவர்களை யாரும் பிரபல படுத்தவும் இல்லை.காரணம் அவர்கள் எளிமையானவர்கள்.

ஒரு விஷயத்தை பிரபலப்படுத்துவதற்கு பிரதமரும் முதல்வரும் பிரபலமான ஒரு நடிகரும் வந்துதான் செய்ய வேண்டியுள்ளது. இவர்கள் யாரும் செய்யாததை எனது உதவியாளர் திரு. சீனிவாசன் பல ஆண்டுகளாக செய்து வருகிறார்.

இவர் தனது பேண்ட் பாக்கெட்டில் கைக்குட்டை க்கு பதிலாக ஒரு மஞ்சள்பையை தான் வைத்து இருப்பார். 2019 இல் பிளாஸ்டிக் பைகள் தடை சட்டம் வந்தபோது கடைகளில் கடுமையான சோதனை செய்யப்பட்டு வந்தது. அந்த சமயத்தில் கடைக்கு சென்றபோது ஒரு பொருளை வாங்க நேரிடும்போது பை இல்லாமல் கஷ்டப்பட்டேன் அப்போது இவர் பாக்கெட்டில் வைத்திருந்த மஞ்சள் போய் தான் எனக்கு உதவியாக இருந்தது.

இதற்கு முன்பு பலர் இவரை இந்த விஷயத்துக்காக முதலமைச்சர் சொன்னதுபோல் பட்டிக்காட்டான் படிக்காதவன் என்றெல்லாம் கேவலப்படுத்தி இருக்கிறார்கள் இப்போதும் பலர் இதை   கேவலமாக விமர்சித்து கொண்டுள்ளனர். ஆனால் அவர் இதை பற்றி எல்லாம் கவலைப் படுவதில்லை.

இப்படி ஆயிரம் சீனிவாசன்கள் நாட்டில் இருக்கிறார்கள் அவர்கள் அனைவரையும் மக்களாட்சி மனதார பாராட்டுகிறது.

 மஞ்சள் பையை கையில் எடுப்போம்....! மாசற்ற உலகத்தை படைப்போம்...!! பிளாஸ்டிக்கை ஒழிப்போம்....!!!