ஸ்டாலின் போலீசார் ஆடும் நாடகம்: ஓபிஎஸ், ஈபிஎஸ் கண்டனம்!

 ஸ்டாலின் போலீசார் ஆடும் நாடகம்: ஓபிஎஸ், ஈபிஎஸ் கண்டனம்!


அதிமுகவினரை குறிவைத்து ரெய்டு நடத்துவது பழிவாங்கும் நடவடிக்கை என அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர் செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி இருவரும் கூட்டாக கண்டனம் தெரிவித்துள்ளனர்.

அதிமுக அரசின் முன்னாள் அமைச்சர் கே.சி வீரமணி வீடு உள்ளிட்ட அவருக்கு சொந்தமான 28 இடங்களில் இன்று லஞ்ச ஒழிப்புத் துறை சோதனை நடைபெற்றது. மாதம் ஒரு அமைச்சர்கள் என கடந்த ஜூலை முதல் லஞ்ச ஒழிப்பு சோதனை நடந்து வருகிறது. ஜூலையில் எம்.ஆர்.விஜயபாஸ்கர், ஆகஸ்ட்டில் எஸ்.பி.வேலுமணி, தற்போது செப்டம்பரில் கே.சி.வீரமணிக்கு தொடர்புடைய இடங்களில் சோதனை நடந்தது.

இது அதிமுகவினரிடையே அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ள நிலையில், இது பழிவாங்கும் நடவடிக்கை என ஓபிஎஸ், ஈபிஎஸ் இருவரும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

இருவரும் கூட்டாக வெளியிட்ட அறிக்கையில், “கருத்து மோதல்‌ நமக்குள்‌ ஏற்படலாம்‌. வளர்ச்சிக்கு அறிகுறி அது. நாம்‌ மக்கள்‌, வன விலங்குகள்‌ அல்ல. இது நாடு, காடு அல்ல. காட்டு முறையைக்‌ கையாண்டால்‌ அதற்குப்‌ பெயர்‌ ஜனநாயகமாகாது; பாசிச முறை அது!" என்றார்‌ பேரறிஞர்‌ அண்ணா. அவரின் இந்தக்‌ கூற்றுக்கு முற்றிலும்‌ முரணான வகையில்‌, ஜனநாயகத்தைக் குழிதோண்டிப்‌ புதைக்கும்‌ நடவடிக்கைகளில்‌ விடியா தி.மு.க. அரசு ஈடுபட்டு வருகிறது.

அண்மையில்‌, புதிதாகத் தோற்றுவிக்கப்பட்ட 9 மாவட்டங்களுக்கு உள்ளாட்சித்‌ தேர்தல்‌ அறிவிக்கப்பட்ட நிலையில்‌, சாத்தியப்படாத வாக்குறுதிகளை அளித்து ஆட்சிக்கு வந்த திமுக, அதை நிறைவேற்ற முடியாமல்‌ மக்களின்‌ வெறுப்பினை சம்பாதித்திருக்கின்ற நிலையில்‌ அதனை மூடி மறைத்து, உள்ளாட்சித்‌ தேர்தலில்‌ எப்படியாவது வெற்றி பெற்றுவிட வேண்டும்‌ என்பதற்காக, முன்னாள்‌ அமைச்சரும்‌, திருப்பத்தூர்‌ மாவட்டக்‌ கழகச்‌ செயலாளருமான கே.சி. வீரமணியுடைய வீட்டிலும்‌, அவரது உறவினர்கள்‌, நண்பர்கள்‌ என்று, நடந்து முடிந்த சட்டமன்றப்‌ பொதுத்‌ தேர்தலில்‌ திமுக-கூட்டணிக்கு எதிராக தேர்தல்‌ வேலை பார்த்தவர்கள்‌ என்று சுமார்‌ 28 இடங்களில்‌, அரசியல்‌ காழ்ப்புணர்ச்சியின்‌ காரணமாக, 'ஸ்டாலின்‌ போலீசார்‌' சோதனை என்ற பெயரில்‌ இன்று ஒரு கபட நாடகத்தை அரங்கேற்றி உள்ளனர்‌. இது, உள்ளாட்சித்‌ தேர்தல்‌ சமயத்தில்‌ திட்டமிட்டு ஆடும்‌ நாடகமே தவிர வேறொன்றுமில்லை” என்று கண்டனம் தெரிவித்துள்ளனர்.

முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார், “ தேர்தல் நடைபெறவுள்ள வேலூர், ராணிப்பேட்டை, திருப்பத்தூர் மாவட்டங்களில் ரெய்டு நடத்தப்படுகிறது.

அதிமுகவை ஒடுக்க வேண்டும், தேர்தலில் ஜனநாயகக் கடமையை ஆற்றக்கூடாது என்பதன் அடிப்படையில், திமுக அரசு பழிவாங்கும் நடவடிக்கையுடன் ரெய்டு நடத்துகிறது. நீதிமன்றத்தில் நிரபராதி என நிலைநாட்டுவோம்" என்று கூறியுள்ளார்.