தமிழக சட்டமன்ற பேரவையை அலங்கரிக்கும் 13 கட்சிகள்..!
தமிழக சட்டமன்றத்திற்குள் பல ஆண்டுகளுக்கு பிறகு பல்வேறு கட்சிகளை சேர்ந்த பிரதிநிதிகளின் குரல் ஓங்கி ஒலிக்க இருக்கிறது.
இதுவரை திமுக, அதிமுக, காங்கிரஸ், என்று மட்டுமே இருந்து வந்த கட்சிகளின் பிரதிநிதித்துவம் இப்போது பரந்து விரிந்துள்ளது
அதன்படி தற்போது நடைபெற்று முடிந்த தேர்தல் மூலம் 13 கட்சிகளை சேர்ந்த பிரதிநிதிகள் சட்டமன்ற அவையை அலங்கரிக்க உள்ளனர்.
தமிழக சட்டமன்றம் என்றாலே திமுக, அதிமுக என்று தான் பலருக்கும் இன்று நினைவுக்கு வரும். ஆனால் அவ்விருகட்சிகளை கடந்து மாற்றுக்கட்சிகளை சேர்ந்த உறுப்பினர்களும் ஆரோக்கியமான விவாதங்களை, ஆலோசனைகளை நல்கிய காலமும் இருந்திருக்கிறது. குறிப்பாக 2001 முதல் 2011 காலகட்டங்களில் நடந்த அத்தகைய நிகழ்வுகள் மீண்டும் திரும்ப இருக்கின்றன. பலதரப்பட்ட சிந்தனைகளை, கொள்கைகளை உடைய உறுப்பினர்களின் உரிமைக் குரல்கள் இனி ஓங்கி ஒலிக்க இருக்கின்றன.
அதன்படி திமுக, அதிமுகவை தவிர்த்து தேசியக் கட்சிகளான காங்கிரஸ், பாஜக, இந்திய கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், உள்ளிட்ட கட்சிகளை சேர்ந்த உறுப்பினர்கள் பேரவைக்கு செல்லவிருக்கின்றனர். இதேபோல் பிராந்தியக் கட்சிகளான விடுதலை சிறுத்தைகள், மதிமுக, மமக, கொ.ம.தே.க., தமிழக வாழ்வுரிமைக் கட்சி, பாமக, புரட்சி பாரதம் என வெவ்வேறு சித்தாத்தங்களை கொண்ட கட்சிகளை சேர்ந்த உறுப்பினர்களும் இம்முறை சட்டப்பேரவைக்கு செல்கின்றனர்.
இதனால் மு.க.ஸ்டாலின் தலைமையிலான திமுக அரசு இதுவரை இல்லாத வகையில் ஒரு புதுமையை எதிர்கொள்ள உள்ளது. இதனிடையே எதிர்கட்சி உறுப்பினர்கள் முன் வைக்கும் கேள்விகள், சந்தேகங்கள், புகார்கள், கோரிக்கைகள் என எல்லாவற்றையும் பேலன்ஸ் செய்து செல்ல வேண்டிய சூழல் உருவாகியுள்ளது. பல்வேறு கட்சிகளை சேர்ந்த உறுப்பினர்களும் இந்த முறை இடம்பெற்றுள்ளதால் புதிதாக அமையவுள்ள 16-வது சட்டமன்றத்தை ஜனநாயக சட்டமன்றமாகவே கருதத் தோன்றுகிறது.