*சோளம் திருடியதாகக் கூறி பட்டியலின இளைஞர் மீது கொடூரத் தாக்குதல்!*
பீகாரில் சோளம் திருடியதாகக் குற்றம்சாட்டி 23 வயது பட்டியலின இளைஞர் தாக்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
பீகார் மாவட்டம் மதேபுரா மாவட்டத்தில் உள்ளது குஷ்தான் கிராமம். இந்த கிராமத்தில் ஒபிசி பிரிவைச் சேர்ந்தவர்கள் பெரும்பான்மையாக வசிக்கின்றனர். அத்துடன் ஷர்மா என்பதை அடைமொழியாகக் கொண்ட பட்டியலின வகுப்பினரும் வசிக்கின்றனர்.
அதே ஊரில் வசிக்கும் 23 வயது பட்டியலின இளைஞர் ஜகாஷ் சர்மா ஒபிசி வகுப்பைச் சேர்ந்தவருக்கு சொந்தமான வயலில் மக்கச்சோளம் திருடியதாக குற்றம்சாட்டி அவரை சிறை பிடித்துள்ளனர். அவரது தலை முடியை பாதி மொட்டையடித்து, கழுத்தில் செருப்பு மாலை அணிவித்து ஊர்வலமாக அழைத்துச் சென்று கடுமையாக தாக்கியுள்ளனர். அத்துடன் மனிதக் கழிவு, சிறுநீரை வாயில் திணித்துள்ளனர்.
ஏப்ரல் 8ஆம் தேதி நடந்த இந்த சம்பவம் குறித்த வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி அதிர்ச்சியூட்டிய நிலையில், மதேபுரா காவல் கண்காணிப்பாளர் யோகேந்திர குமார் இதுதொடர்பாக விசாரணைக்கு உத்தரவிட்டார். அதன் பேரில் ஒருவர் கைதுசெய்யப்பட்டுள்ளார், அடையாளம் காணப்பட்ட 7 பேர், அடையாளம் காணப்படாத 25 பேரின் மீது பட்டியலினத்தவர் வன்கொடுமை தடுப்புச் சட்டம் உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
தனது மகனை இந்த நிலைக்கு ஆளாக்கியவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டுமென ஜகாஷ் சர்மாவின் தந்தை பிரேம் லால் சர்மா வலியுறுத்தியுள்ளார்