50 வயசுக்கு மேற்பட்டவர்களுக்கு கொரோனா தடுப்பூசி.. எப்போது துவக்கம்? ஹர்ஷ் வர்த்தன் அறிவிப்பு

 50 வயசுக்கு மேற்பட்டவர்களுக்கு கொரோனா தடுப்பூசி.. எப்போது துவக்கம்? ஹர்ஷ் வர்த்தன் அறிவிப்பு 



 கொரோனா தடுப்பூசி போடும் பணியின் மூன்றாவது கட்டம் அடுத்த மாதம் தொடங்குகிறது. அப்போது, 50 வயதைக் கடந்த 27 கோடி பேருக்கு தடுப்பூசி செலுத்தப்படுகிறது. 

கொரோனா தடுப்பூசி போடும் பணி கடந்த மாதம் 16ம் தேதி நமது நாட்டில் தொடங்கியது. முதலில் சுகாதார பணியாளர்களுக்கு ஊசி செலுத்தப்பட்டது. முன்கள பணியாளர்களுக்கு இந்த வாரத்தில் தடுப்பூசி போடப்பட்டு வருகிறது. 

இந்த நிலையில், லோக்சபாவில் நேற்று கேள்வி நேரத்தின்போது இது தொடர்பாக கேள்விகள் எழுப்பப்பட்டன. ிந்த கேள்விகளுக்கு பதிலளித்து மத்திய, சுகாதாரத் துறை மந்திரி ஹர்ஷவர்தன் பதில் அளித்து கூறியதாவது: 

சுகாதார, முன்கள பணியாளர்கள் 3 கோடி பேருக்கு தடுப்பூசி போட திட்டமிடப்பட்டுள்ளது. இதுவரை சுமார் 50 லட்சம் பேருக்கு தடுப்பூசி போடப்பட்டுள்ளது. இந்நிலையில், மூன்றாவது கட்டமாக கொரோனா தடுப்பூசி போடும் பணி அடுத்த மாதம் தொடங்குகிறது. அதில், 50 வயது மற்றும் அதை கடந்தவர்களுக்கும், இதர நோய்களால் பாதிக்கப்பட்ட 50 வயதுக்கு உட்பட்டவர்களுக்கும் கொரோனா தடுப்பூசி போடப்படும்.

 இப்பிரிவினரில் மொத்தம் 27 கோடி பேருக்கு தடுப்பூசி செலுத்தப்படும். இப்பணி தொடங்கும் தேதியை இப்போதே சொல்ல முடியவில்லை. மார்ச் மாதத்தில் பணி தொடங்கும். மார்ச் 2வது 3வது அல்லது 4வது வாரத்தில் தொடங்கும். தடுப்பூசி பணிக்கு பட்ஜெட்டில் ரூ.35 ஆயிரம் கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. தற்போது இந்தியாவில், கோவிஷீல்டு, கோவேக்சின் ஆகிய 2 தடுப்பூசிகள் போடப்பட்டு வருகின்றன. 

இதுதவிர, 7 தடுப்பூசிகள் உருவாக்கும் பணி முன்னேறிய கட்டத்தில் இருக்கிறது. அவற்றில் 3 தடுப்பூசிகள், 3ம் கட்ட மருத்துவ பரிசோதனையிலும், 2 தடுப்பூசிகள் முதல் மற்றும் இரண்டாம் கட்ட மருத்துவ பரிசோதனைகளிலும், மற்றவை பரிசோதனைக்கு முந்தைய கட்டத்திலும் உள்ளன. இவ்வாறு ஹர்ஷ் வர்த்தன் தெரிவித்தார்.