'ஆன்மிக அரசியலுடன், நாத்திகம் சேர வாய்ப்பு குறைவு', கமல் - ரஜினி குழப்பும் கூட்டணி

'ஆன்மிக அரசியலுடன், நாத்திகம் சேர வாய்ப்பு குறைவு', கமல் - ரஜினி குழப்பும் கூட்டணி



ஈகோ பார்க்காமல் ரஜினியின் சேர்ந்து பணியாற்றுவேன் என மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமலஹாசன் தெரிவித்துள்ளார். அதுகுறித்து, தனியார் தொலைக்காட்சிக்கு பேட்டியளித்த பத்திரிகையாளர் ப்ரியன் கூறியதாவது, '' ரஜினியுடன் சேர்ந்து பணியாற்றுவேன் என்று கமலஹாசன் ஒரு வருடத்துக்கு முன்னதாகவே கூறியிருந்தார்.

ஆனால், இதுகுறித்து அடிப்படையாக பார்க்கும் போது சில விஷயங்கள் முரணாக உள்ளது. கமல் கட்சி தொடங்கிய பின்னர் டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலையும், மேற்கு வங்க முதல்வர் மம்தா பேனர்ஜி மற்றும் கேரளா முதல்வர் பினராயி விஜயன் உள்ளிட்டோரை சந்தித்தார். கமல் சந்தித்த அனைவரும் பாஜகவுக்கு எதிரானவர்கள். பிரதமர் மோடியை விமர்னம் செய்பவர்கள்தான்.
அதுபோல, கமலும் பாஜகவுக்கு எதிரான அரசியல் நிலைபாடோடுதான் செயல்பட்டு வருகிறார். மேலும், நாத்திக சிந்தனையுடன் திராவிட சித்தாந்தத்தை பேசும் கமல் மீது இடது சாரி என்ற முத்திரையும் விழுந்தது. அதே சமயம், ரஜினி பாஜகவுக்கு ஆதரவாக உள்ளதாகவும், மோடியுடன் ரஜினி நெருக்கமாக இருக்கிறார் என்ற பேச்சுகளும் மக்களிடையே ஏற்பட்டுள்ளன.
மத்திய அரசுக்கு ஆதரவாக சில நேரங்களில் ரஜினி கூறிய கருத்துக்கள் அதற்கு காரணமாக அமைந்தன. ஆனால், ரஜினி கட்சி தொடங்கிய பின்னர் தான், பாஜகவுடன் அவருக்கு இருக்கும் நிலைப்பாடு மற்றும் பாஜக உறவு குறித்த பேச்சில் இருந்து எப்படி தன்னை தூரப்படுத்தி கொள்வார் என்பதை பார்க்க முடியும். ஆகையால், ரஜினி, கமல் இருவருக்குள்ளும் இருக்கும் அடிப்படை வித்தியாசங்கள் இருவரையும் ஒன்றிணைக்குமா என்பது சந்தேகம்தான். மேலும், முதல்வர் வேட்பாளரை நானே முடிவு செய்வேன் என்று ரஜினி கூறியிருக்கிறார்.
ஒருவேளை ரஜினியுடன் கமல் கூட்டணி அமைத்தால் ரஜினியின் கட்சி வேட்பாளருக்காக அவர் ஈகோ இல்லாமல் வேலை செய்வாரா அல்லது முதல்வர் வேட்பாளராக கமலை ரஜினி அறிவிப்பாரா என்ற சந்தேகங்களும் உள்ளது. வரும் தேர்தலில் கமலும், ரஜினியும் சேர்ந்து களத்துக்கு வந்தால், 20 வருசத்துக்கு முன்பு இருந்த மக்களின் மனநிலை அப்படியே இருக்குமா என்ற கேள்வியும் எழுகிறது'' என இவ்வாறு அவர் கூறினார்.