இன்று முதல் விடிய விடிய பணம் அனுப்பலாம்

 

இன்று முதல் விடிய விடிய பணம் அனுப்பலாம்!

ஆர்டிஜிஎஸ் முறையில் இன்று முதல் 24 மணி நேரமும் நீங்கள் பணம் அனுப்பலாம்.

அக்டோபர் மாதத் தொடக்கத்தில் ரிசர்வ் வங்கி வெளியிட்டிருந்த அறிவிப்பில் டிசம்பர் மாதம் முதல் ஆர்டிஜிஎஸ் சேவைகள் 24 மணி நேரமும் கிடைக்கும் என்று ரிசர்வ் வங்கி ஆளுநர் சக்திகாந்த தாஸ் அறிவித்திருந்தார். இதற்கு முந்தைய நடைமுறைப்படி, ஆர்டிஜிஎஸ் சேவைகள் காலை 7 மணி முதல் மாலை 6 மணி வரை மட்டுமே கிடைத்தது. அதாவது, ஆர்டிஜிஎஸ் சேவைகள் ஒரு நாளைக்கு 11 மணி நேரம் மட்டுமே கிடைத்தன. இதனால் மாலை 6 மணிக்குப் பிறகு
பணம் செலுத்துவதற்கு நாம் அடுத்த நாள் காலை 7 மணி வரை காத்திருக்க வேண்டிய சூழ்நிலை இருந்தது.
  • இந்த நடைமுறையில் பரிவர்த்தனை மேற்கொள்வதில் சிக்கல் இருந்ததால் வாடிக்கையாளர்களுக்கு பணம் செலுத்துவதற்கு வசதியாக 24 மணி நேரமும் ஆர்டிஜிஎஸ் சேவைகள் கிடைக்க ரிசர்வ் வங்கி முடிவு செய்தது. அதன்படி, டிசம்பர் 1 முதல் 24 மணி நேரமும் ஆர்டிஜிஎஸ் சேவைகளை இனி நாம் பெறலாம். ஆர்டிஜிஎஸ் மூலம் பெரிய தொகையை மாற்றலாம். ரூ.2 லட்சத்துக்கு மேல் எவ்வளவு பெரிய தொகையையும் நீங்கள் இதில் அனுப்ப முடியும்.
ஒரு கணக்கின் மூலம் ஒருவருக்கு பணம் அனுப்ப பொதுவாக நான்கு வழிகள் உள்ளன. யுபிஐ, நெஃப்ட், ஆர்டிஜி.எஸ் மற்றும் ஐஎம்பிஎஸ். இதில், யுபிஐ பணத்தை மாற்றுவதற்கான வரம்பைக் கொண்டுள்ளது. நெஃப்ட் மூலம் பணம் மாற்றப்பட்டால் அது மற்றவரின் கணக்கிற்கு செட்டில்மெண்ட் முறையில் செல்லும். இதில் வங்கி நேரங்களில் மட்டுமே பணத்தை மாற்ற முடியும். ஐஎம்பிஎஸ் மூலம் உடனடியாக பணத்தை மாற்ற முடியும். இதற்கு கட்டணம் வசூலிக்கப்படும்.