தமிழ்நாட்டில் 500 எம்.பி.பி.எஸ் இடங்கள் வன்னியர்களுக்கு ஒதுக்கீடு?
தமிழ்நாட்டில் 26 அரசு மருத்துவ கல்லூரிகளில் 3650 இடங்கள் மற்றும் 14 தனியார் கல்லூரிகளில் 1052 இடங்கள் உள்ளன.
தமிழகத்தில் மிகவும் பிற்படுத்தப்பட்டவர்களுக்கு வழங்கப்படும் 20% இடஒதுக்கீட்டின் கீழ், வன்னியர்களுக்கு மட்டும் 10.5% உள் ஒதுக்கீடு வழங்குவதற்கான சட்டம் கடந்த பிப்ரவரி மாதம் தமிழக சட்டமன்றத்தில் நிறைவேற்றப்பட்டது. இதற்கு தமிழக ஆளுநரும் ஒப்புதல் அளித்தார்.
தமிழகத்தில் கல்வி மற்றும் வேலைவாய்ப்பில், வன்னியர்களுக்கு வழங்கப்பட்ட உள்ஒதுக்கீடு அரசியல் சாசனத்திற்கு எதிரானது. முழுமையான கணக்கெடுப்பு மேற்கொள்ளப்படாமல் குறிப்பிட்ட பிரிவினருக்கு உள் ஒதுக்கீடு வழங்க முடியாது. தமிழக அரசின் சட்டத்திற்கு தடை விதிக்க வேண்டும் என சென்னையைச் சேர்ந்த சந்தீப் குமார் மற்றும் சிவகங்கையை சேர்ந்த முத்துகுமார் ஆகியோர் உச்சநீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்திருந்தனர்.
கடந்த சில தினங்களுக்கு முன் உச்சநீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்த இந்த வழக்கில், வன்னியர்களுக்கு 10.5% இட ஒதுக்கீட்டுக்கான அரசாணைக்கு தடை விதிக்க முடியாது என உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. பிப்ரவரி மாதம் வெளியிடப்பட்ட அரசாணையில் வன்னியர், வன்னியா, வன்னியகவுண்டர், கவுண்டர்,படையாட்சி, பள்ளி மற்றும் அக்னி குல சத்ரியர் ஆகிய பிரிவுகள் அடங்கிய வன்னியக்குல சத்ரியருக்கு அரசு பணிகளிலும், தனியார் நிறுவனங்கள் உட்பட கல்வி நிறுவனங்களிலும் மிகவும் பிற்படுத்தப்பட்டவர்கள் இட ஒதுக்கீட்டில் 10.5% இட ஒதுக்கீடு வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டிருந்தது.
இதனடிப்படையில் தமிழ்நாட்டில் 26 அரசு மருத்துவ கல்லூரிகளில் 3650 இடங்கள் மற்றும் 14 தனியார் கல்லூரிகளில் 1052 இடங்கள் உள்ளன. இதில் மிகவும் பிற்படுத்தப்பட்டோருக்கு 20% இட ஒதுக்கீடு என்ற அடிப்படையில் சுமார் 1000 இடங்கள் ஒதுக்கப்படும். அதில் 10.5% உள் ஒதுக்கீட்டாக 500 இடங்கள் வன்னியர்களுக்கு ஒதுக்கப்படும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.
11 புதிய அரசு மருத்துவக் கல்லூரிகளில் மாணவர் சேர்க்கை தொடங்கினால் மேலும் 150 இடங்கள் ஒதுக்கப்படலாம் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.
