நீட் தேர்வு முறையினால் ஏற்பட்டுள்ள பாதிப்புகளை அகற்றிட ராஜன் தலைமையில் உயர்நிலை குழு

நீட் தேர்வு முறையினால் ஏற்பட்டுள்ள பாதிப்புகளை அகற்றிட ராஜன் தலைமையில் உயர்நிலை குழு


நீட் தேர்வு முறையினால் ஏற்பட்டுள்ள பாதிப்புகளை அகற்றிட ராஜன் தலைமையில் உயர்நிலை குழு அமைத்து தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.

 இது குறித்து வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், ஒன்றிய அரசால் கொண்டு வரப்பட்ட நீட் தேர்வு முறையால் நமது மாநிலத்தில் உள்ள கிராமப்புற ,நகர்ப்புற ஏழை எளிய மாணவர்கள், அரசுப் பள்ளியில் பயிலும் மாணவர்கள் ,தமிழ் வழியில் கல்வி பயில்வோர் போன்ற நமது சமுதாயத்தில் பின்தங்கிய நிலையில் உள்ள மாணவர்களுக்கு கடந்த சில ஆண்டுகளாக மருத்துவக் கல்வி பயிலும் வாய்ப்பும் மறுக்கப்பட்டு வரும் நிலை உள்ளதாக கல்வியாளர்கள் பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர் . இதனைக் கருதியே சமூகநீதிக்கு எதிரான இந்த நீட் தேர்வு முறை கைவிடப்பட வேண்டும் என்றும் மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதி ஆட்சிக் காலத்தில் இயற்றப்பட்ட சட்டத்தின்படி பன்னிரண்டாம் வகுப்பு இறுதித் தேர்வு மதிப்பெண்களின் அடிப்படையில் மட்டுமே மருத்துவ கல்லூரி இடங்கள் நிரப்பப்பட வேண்டும் என்றும் தொடர்ந்து வலியுறுத்தி இதற்கான பல சட்ட போராட்டங்கள் தமிழக அரசு தொடர்ந்து நடத்தி வருகிறது.

சமூக நீதியை நிலைநாட்டும் வரலாற்று கடமை தமிழ்நாட்டிற்கு எப்போதும் உண்டு. இந்த கடமையை தொடர்ந்து நிறைவேற்றும் வகையில் நீட் தேர்வு முறையினால் ஏற்பட்டுள்ள பாதிப்புகளை அகற்றிட தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் இந்த அரசு எடுத்த உறுதிபூண்டுள்ளது. இந்த நீட் தேர்வு முறையானது சமுதாயத்தில் பின்தங்கிய நிலையில் உள்ள மாணவர்களுக்கு கடந்த சில ஆண்டுகளாக பாதிப்புகளை ஏற்படுத்தி உள்ளதா ? என்பது குறித்தும், அவ்வாறு பின்தங்கிய மாணவர்களுக்கு பாதிப்பு ஏற்பட்டிருந்தால் அவற்றை சரிசெய்யும் வகையில் முறைக்கு மாற்றாக அனைவரும் பயன்பெற தக்க வகையிலான மாணவர் சேர்க்கை முறைகளை வகுத்து அவற்றை நடைமுறைப் படுத்துவதற்கான சாத்தியக் கூறுகள் பற்றியும், அவற்றுக்கான சட்ட வழிமுறைகள் பற்றியும் முழுமையாக ஆராய்ந்து அரசுக்கு பரிந்துரை களை அளித்திட ஓய்வுபெற்ற நீதியரசர் ஏ. கே. ராஜன் அவர்கள் தலைமையில் கல்வியாளர்கள் மற்றும் சம்பந்தப்பட்ட அலுவலர்கள் அடங்கிய உயர்நிலைக் குழு ஒன்று அமைக்கப்படும் என தமிழக அரசு தெரிவித்துள்ளது.