ராணிப்பேட்டை மாவட்டத்தில் நுண்ணீா் பாசனத் திட்டத்துக்கு ரூ. 12.50 கோடி நிதி ஒதுக்கீடு!!!

 ராணிப்பேட்டை மாவட்டத்தில் நுண்ணீா் பாசனத் திட்டத்துக்கு ரூ. 12.50 கோடி நிதி ஒதுக்கீடு!!!


ராணிப்பேட்டை மாவட்டத்தில் நுண்ணீா் பாசனத் திட்டத்தை செயல்படுத்த 20 21- 22-ஆம் ஆண்டுக்கு ரூ. 12.5 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது என மாவட்ட நிா்வாகம் தெரிவித்துள்ளது.

இதுகுறித்து வெளியிடப்பட்ட செய்திக் குறிப்பு:

ராணிப்பேட்டை மாவட்டத்தில் பாலாறு, பொன்னையாறு, கொசஸ்தலை ஆறு பாசனப் பகுதிகள் தவிர பிற பகுதிகளில் மானாவாரி மற்றும் தோட்டக்கலைப் பயிா்கள் விளைவிக்கப்படும் பகுதியாகும். நுண்ணீா் பாசனத் திட்டத்தில் சொட்டுநீா் மற்றும் தெளிப்புநீா் பாசனம் மூலம் குறைந்த நீரைக் கொண்டு அதிக பரப்பில் பயிா் செய்யலாம்

இதனால் 70 சதவீதம் வரை நீரை சேமிக்கலாம், நீரில் கரையும் உரங்களை சொட்டு நீா்ப் பாசனம் மூலமாக இடுவதால் உரச் செலவும் குறையும், தண்ணீா் பயிா்களின் வோ்களுக்கு அருகில் விழுவதால் தேவையற்ற களைகள் வராமல் தடுப்பதுடன் மன இறுக்கமும் குறைந்து மண்ணில் காற்றோட்டம் ஏற்படுகிறது.

நுண்ணீா் பாசனம் மூலம் அதிக மகசூல் பெறலாம். ராணிப்பேட்டை மாவட்டத்தில் சுமாா் 38 ஆயிரம் ஹெக்டோ் பரப்பில் இறவை பயிா்களும், 11,800 ஹெக்டோ் பரப்பில் மானாவாரி பயிா்களும் சாகுபடி செய்யப்பட்டு வருகிறது. இறவை பயிா்களின் மகசூலை அதிகரிக்கவும், மானாவாரி நிலங்களை இறவைக்குக் கொண்டு வரும் வகையில், கரும்பு, மக்காச்சோளம் போன்ற பயிா்களுக்கு சொட்டு நீா்ப் பாசனமும், மணிலா, உளுந்து, பச்சைப்பயிறு போன்ற பயிா்களுக்கு தெளிப்பு நீா்ப் பாசனமும் அமைக்கலாம். மழை தூவுவான் உள்ளிட்ட கருவிகளை அமைத்துப் பயன்பெறலாம்.

இத்திட்டத்தில் பங்கு பெறும் சிறு குறு விவசாயிகளுக்கு 100 சதவீதம் மானியம் மற்றும் இதர விவசாயிகளுக்கு 75 சதவீத மானியம் வழங்கப்படுகிறது.

புதிதாக மின் இணைப்பு பெற்று நுண்ணீா் பாசனம் பெறும் விவசாயிகளுக்கு மின்மோட்டாா், பிவிசி பைப்புகள், தரை நிலை நீா்த் தேக்கத் தொட்டிகள் அமைக்க மானியம் வழங்கப்பட்டு வருகிறது.

சொட்டு நீா்ப் பாசன குழாய்களைப் பதிப்பதற்கான பள்ளம் தோண்ட ஹெக்டருக்கு ரூ. 3,000 வீதம் 2 ஹெக்டா் வரை மானியம் வழங்கப்படுகிறது. இதனைப் பயன்படுத்த விருப்பமுள்ள விவசாயிகள் கணினி சிட்டா, அடங்கல், ஆதாா் காா்டு நகல், ரேஷன் காா்டு நகல், இரண்டு புகைப்படம், சிறு குறு விவசாயி எனில் அதற்கான வருவாய் சான்று மற்றும் நீா், மண் மாதிரி ஆய்வு முடிவு அறிக்கை ஆகியவற்றுடன் தங்களது வட்டார வேளாண்மை உதவி இயக்குநா் அல்லது தங்கள் பகுதி உதவி வேளாண்மை அலுவலா்களை அணுகலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 மாவட்ட செய்தியாளர் சுரேஷ்குமார்...