மருமகனுக்கு எம்.பி. பதவி....! உண்மை நிலை என்ன.....?
நாடாளுமன்றத்தில் மக்களவை மற்றும் மாநிலங்களவை என இரு அவைகள் உள்ளன. மக்களின் வாக்குகள் மூலம் தேர்வு செய்யப்படும் எம்.பி-க்கள் லோக்சபா அதாவது மக்களவையில் உறுப்பினர்களாக அமருவர். மாநிலங்களிலுள்ள எம்.எல்.ஏ-க்கள் வாக்களித்து எம்.பி-க்களாகத் தேர்வாகக் கூடியவர்கள் ராஜ்யசபா அதாவது மாநிலங்களவையில் உறுப்பினர்களாக அமருவார்கள். லோக்சபா எம்.பி-க்களுக்கு ஐந்து ஆண்டுகள் பதவிக்காலம் என்றால், ராஜ்யசபா எம்.பி-க்களுக்கு ஆறு ஆண்டுகள் பதவிக்காலம்.
அடுத்து வரும் ராஜ்யசபா தேர்தலில் தி.மு.க-வுக்குச் சாதகமாயின் யாரை வேட்பாளர்களாக நிறுத்துவார் முதல்வர் ஸ்டாலின் என்பது பற்றி தி.மு.க-வினரிடம் பேசியபோது, ``இதுவரை மாப்பிள்ளை சபரீசன் வெளியில் தெரியாமல் இயங்கிவந்தார். இந்தத் தேர்தலில் எல்லாவற்றுக்கும் சூத்ரதாரி சபரீசன்தான் என்பது தெரிந்துவிட்டது. இனி பகிரங்க அரசியலில் மாப்பிள்ளை இறங்கினாலும் ஆச்சர்யப்படுதற்கில்லை. அந்த வகையில், முதல்வராக ஆகியிருக்கும் ஸ்டாலினுக்கு டெல்லி அரசுடன் சரியானரீதியில் லாபி செய்வதற்கு ஆட்கள் இல்லை என்பதால் ராஜ்யசபா பதவியை மாப்பிள்ளைக்குக் கொடுத்து டெல்லிக்கு அனுப்ப வாய்ப்புண்டு. அப்படியில்லையெனில், எஸ்.பி.வேலுமணிக்கு டஃப் கொடுத்த கார்த்திகேய சிவசேனாபதிக்கும், ஓ.பி.எஸ்-க்கு டஃப் கொடுத்த தங்க தமிழ்ச்செல்வனுக்கும் ராஜ்யசபா பதவியைக் கொடுப்பதற்கும் வாய்ப்புள்ளது" என்றனர்.
தற்போது காலியாக உள்ள 3 எம்பி பதவிகளுக்கும் குறைந்த கால அவகாசமே உள்ளதால் இதில் அவரது மருமகன் நிற்பதற்கு வாய்ப்பில்லை. அதுவும் இல்லாமல் தற்போதைய தமிழக அமைச்சரவையில் அவரது மகன் உதயநிதிக்கு முக்கிய அமைச்சர் பதவி கொடுப்பதாக இருந்தது அதற்கு முதலமைச்சர் மு க ஸ்டாலின் வாய்ப்பு வழங்கவில்லை இந்தநிலையில் மருமகனுக்கு எம்பி பதவி வழங்குவார் என்பது கேள்விக்குறிதான்.
இப்போதைய சூழலில் வாரிசுகளுக்கு பதவிகள் வழங்கும் மனநிலையில் அவர் இல்லை என்று கூறப்படுகிறது.
