ஸ்டாலின் அமைச்சரவை: புதியவர்களுக்கு ஏன் வாய்ப்பு? அதிருப்தியில் சீனியர்கள்.....

ஸ்டாலின் அமைச்சரவை: புதியவர்களுக்கு ஏன் வாய்ப்பு? அதிருப்தியில் சீனியர்கள்......



முதல்வர்களின் அமைச்சரவை, அவர்கள் பணியமர்த்தும் அதிகாரிகளை வைத்து, அவர்களது அரசு எப்படி அமையப் போகிறது என்பதை தெரிந்து கொள்ளலாம். அந்த வகையில், ஸ்டாலின் மேற்கொண்டுள்ள அதிகாரிகள் மாற்றம், அவரது அமைச்சரவை உள்ளிட்டவைகள் பாராட்டுகளை பெற்றுள்ளது. அமைச்சரவையின் பெயர்கள் மாற்றப்பட்டு சில துறைகள் பிரிக்கப்பட்டுள்ளன. முதலமைச்சராக பதவியேற்ற ஸ்டாலினுடன் சேர்ந்து 33 அமைச்சர்கள் பொறுப்பேற்றனர். பொதுவாக சீனியர்கள் பலரும் இடம் பெறும் அமைச்சரவையில், இந்த முறை 15 புதிய முகங்களுக்கும், அதிமுக அமைச்சரவையில் இடம்பெற்றிருந்த மூன்று பேருக்கும் ஸ்டாலின் தனது அமைச்சரவையில் இடம் கொடுத்துள்ளார். சீனியர்கள் பலருக்கும் கூட அவர்கள் எதிர்பார்த்த துறை ஒதுக்கப்படவில்லை. சில முக்கியமான துறைகளும் புதியவர்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ளது.

சென்னை மேயராக இருந்த போது அவரது செயல்பாடுகளுக்காக மிகவும் கவனிக்கப்பட்டவர் மா.சுப்பிரமணியன். எவரும் எளிதாக தொடர்பு கொள்ளும் மனிதர் என்று பெயரெடுத்தவர். முதல்முறையாக அமைச்சராகியுள்ள அவருக்கு, தமிழகத்தில் தற்போது கொரோனா கோரதாண்டவம் ஆடிவரும் நிலையில், மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை வழங்கப்பட்டுள்ளது. இதற்கான பணிகளை அவர் செவ்வனே செய்வார் என்ற எதிர்பார்ப்பு நிலவுகிறது.



சுமார் ரூ.5 லட்சம் கோடியை கிட்டத்தட்ட எட்டி கடனில் சிக்கி தமிழகம் தவித்து வரும் நிலையில், நிதித்துறை முதன்முதலாக அமைச்சராகும் பழனிவேல் ராஜனுக்கு கொடுக்கப்பட்டுள்ளது. பணியாளர் நலத் துறை தற்போது மனிதவளத் துறை எனப் பெயர் மாற்றம் செய்யப்பட்டு அதுவும் அவருக்கு கொடுக்கப்பட்டுள்ளது. நிதித்துறை மற்றும் மனிதவள மேம்பாட்டுத்துறையில் சுமார் 20 ஆண்டுகள் சர்வதேச அளவிலான அனுபவத்தைக் கொண்ட பழனிவேல் ராஜன் மிகவும் சவாலான ஒரு காலகட்டத்தில் நியமிக்கப்பட்டுள்ளார்


பிற்படுத்தப்பட்டோர் நலத் துறை அமைச்சராக நியமிக்கப்பட்டிருக்கும் எஸ்.எஸ். சிவசங்கர், மக்கள் நலப் பணிகளுக்காகவும் அறியப்பட்டவர். முதல்முறையாக அமைச்சராகும் இவர், செம்பருத்து எனும் சிறுமி கேட்ட நூலகத்தை அச்சிறுமி கையாலேயே திறந்து வைத்து கல்வெட்டிலும் ‘நூலகம் திறப்பாளர்- மாணவி செம்பருத்தி’ என்று அச்சிறுமியின் பெயரை இடம் பெறச்செய்தவர்.



திட்டக்குடி தொகுதியில் போட்டியிட்டு வென்ற சி.வி கணேசன் தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டு துறை அமைச்சராக தேர்வு செய்யப்பட்டுள்ளார். திமுகவின் தீவிர விசுவாசியான இவர், தனது களப்பணிக்கு பெயர் போனவர். கொரோனா காலத்தில் கடந்த ஆண்டு தனது உயிரைப் பற்றிக் கவலைப்படாமல் தொகுதி முழுவதும் சுற்றி அத்தியாவசிய பொருட்களை வழங்கியவர். இவருக்கும் கொரோனா தொற்று ஏற்பட்டு பின் குணமடைந்தார். கட்சியினரோடும் தொகுதி மக்களோடும் எப்போதும் பரபரப்பாக வலம் வருபவர்.

காலநிலை மாற்றம் மிக முக்கியமான அபாயமாக உருவெடுத்து வரும் நிலையில், சுற்றுச்சூழல் துறையுடன் பருவநிலை மாற்றம் என்ற பெயரும் சேர்க்கப்பட்டு புதுக்கோட்டையைச் சேர்ந்த சி.வி. மெய்யநாதனுக்கு கொடுக்கப்பட்டுள்ளது. இவர் புதுக்கோட்டை மாவட்டத்தில் ஹைட்ரோ கார்பன் திட்டங்களுக்கு எதிராகப் போராடியவர்.

செஞ்சி மஸ்தான் சிறுபான்மையினர் நலத் துறைக்கும், வெளிநாடு வாழ் தமிழர் துறைக்கும் அமைச்சராக நியமிக்கப்பட்டிருக்கிறார். உலகெங்கும் வாழும் தமிழர்களுடன் தொடர்பை ஏற்படுத்தும் நோக்கில் இந்த துறை ஏற்படுத்தப்பட்டுள்ளது. டீக்கடையில் வேலை பார்த்து இந்த நிலைக்கு உயர்ந்துள்ள இவர், பழையதை எப்போதும் மறக்காதவர் என்று தொகுதி மக்களிடையே பெயரெடுத்தவர்.


மிக முக்கியத் துறையான பள்ளிக் கல்வித் துறை புதிய முகமான அன்பில் மகேஷ் பொய்யாமொழிக்கு வழங்கப்பட்டுள்ளது. இவர் உதயநிதி ஸ்டாலினின் நெருக்கமான நண்பர். நீட் தேர்வு, மும்மொழிக் கொள்கை, மத்தியப் பட்டியலில் கல்வி என்று கல்வியை சுற்றி பல விஷயங்கள் அரங்கேறிக் கொண்டிருப்பதுடன், கொரோனா காலத்தில் கல்வியின் சூழல் மாறியிருக்கும் நிலையில், அன்பில் மகேஷுக்கு இந்தத்துறை ஒதுக்கப்பட்டுள்ளது.

சேகர் பாபுவுக்கு இந்து சமய அறநிலையத்துறை ஒதுக்கப்பட்டுள்ளது. அதிமுகவில் இருந்தபோது எம்.எல்.ஏ.வாக இருந்தாலும் அவருக்கு அப்போது அமைச்சர் பதவி தரப்படவில்லை. தற்போது முதன்முறையாக ஸ்டாலின் அமைச்சரவையில் அமைச்சராகிறார். “கோயில் மீட்பு” இயக்கம் திடீரென்று முனைப்புப் பெறுவதையும் தமிழகத்தில் இந்துத்துவக் கொள்கைகளின் பரவலுக்கான தீவிர முயற்சிகளையும் பிரித்துப் பார்க்க முடியாது. கூட்டணியின் உதவியுடன் சட்டமன்றத்தில் பாஜக உறுப்பினர்கள் நுழைந்திருப்பதும் இந்துத்துவ இயக்கங்களை மேலும் உற்சாகப்படுத்தியிருக்கிறது. இத்தகைய சூழலில், மிகுந்த இறை நம்பிக்கை கொண்ட சேகர் பாபுவுக்கு இந்த துறை வழங்கப்பட்டுள்ளது. தனது கடுமையான களப்பணிகளுக்கும், தொகுதி மக்களுடனான ஓட்டத்துக்கும் அறியப்பட்டவர்.


ராணிப்பேட்டை தொகுதியில் போட்டியிட்டு வென்ற ஆர். காந்தி கைத்தறி மற்றும் துணிநூல் துறை அமைச்சராகியுள்ளார். 4 முறை ராணிப்பேட்டை தொகுதியில் போட்டியிட்டு சட்டமன்ற உறுப்பினராக தேர்வு செய்யப்பட்டவர். மதுரை கிழக்கு தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்ற பி.மூர்த்தி வணிக வரி மற்றும் பதிவுத்துறை அமைச்சராகியுள்ளார். ராசிபுரம் தொகுதியில் போட்டியிட்டு வென்ற மதிவேந்தனுக்கு சுற்றுலாத்துறை ஒதுக்கப்பட்டுள்ளது.


ஓட்டன்சத்திரம் தொகுதியில் தொடர்ச்சியாக வெற்றி பெற்று வரும் சக்கரபாணிக்கு உணவு மற்றும் உணவு பொருள் வழங்கல் துறை ஒதுக்கப்பட்டுள்ளது. முதல் முறையாக அமைச்சராகும் இவர், இதற்கு முன்பு திமுக கொறடாவாக இருந்துள்ளார். பத்மநாபபுரம் தொகுதியில் தொடர்ந்து 2ஆவது முறையாக வெற்றி பெற்ற மனோ தங்கராஜூக்கு தகவல் தொழில்நுட்பத் துறை வழங்கப்பட்டுள்ளது.


ஆவடி தொகுதியில் போட்டியிட்டு அதிமுக அமைச்ச்சராக இருந்த மாஃபா பாண்டியராஜனை தோற்கடித்து வெற்றி பெற்ற சா.மு நாசர், பால் வளத்துறையும், திருப்பூர் மாவட்டம் தாராபுரம் தொகுதியில் போட்டியிட்டு தமிழக பாஜக தலைவர் எல்.முருகனை தோற்கடித்த கயல்விழி செல்வராஜ், ஆதிதிராவிடர் நலத்துறை ஒதுக்கப்பட்டுள்ளது.


மேற்கண்டவர்கள் தவிர திமுகவில் புதியவர்களும், அதிமுக ஆட்சியில் ஏற்கனவே அமைச்சர்களாக இருந்தவர்களுமான செந்தில் பாலாஜி, ராஜகண்ணப்பன், அனிதா ராதாகிருஷ்ணன் ஆகியோருக்கும் அமைச்சர் பதவி கொடுக்கப்பட்டுள்ளது. திமுகவில் இருக்கும் சீனியர்கள் பலருக்கு எதிர்பார்த்த துறைகள் கிடைக்கவில்லை. சீனியர்களிடமிருந்து துறைரீதியாக சில விஷயங்களை கண்டிப்புடன் எடுத்துச் சொல்ல முடியாது, சாதித்துக் கொள்ள முடியாது என்பதால் கட்சித் தலைமை இந்த முடிவை எடுத்திருப்பதாக திமுக வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன.