புதிய கல்வி கொள்கை: மாநில கல்விதுறை செயலாளர்களுடன் மத்திய அரசு ஆலோசனை- தமிழக அரசு புறக்கணிப்பு!

புதிய கல்வி கொள்கை: மாநில கல்விதுறை செயலாளர்களுடன் மத்திய அரசு ஆலோசனை- தமிழக அரசு புறக்கணிப்பு!



புதிய கல்வி கொள்கையை அமல்படுத்துவது தொடர்பாக மாநில கல்வித் துறை செயலாளர்களுடன் மட்டும் மத்திய அமைச்சர் ரமேஷ் பொக்ரியால் நடத்தும் ஆலோசனை கூட்டத்தை தமிழக அரசு புறக்கணித்துள்ளது. மாநில கல்வி அமைச்சர்களுடனும் புதிய கல்வி கொள்கை தொடர்பாக ஆலோசனை நடத்த வலியுறுத்தியுள்ளது தமிழக அரசு.

புதிய கல்வி கொள்கையை அமல்படுத்துவதில் மத்திய அரசு முனைப்பாக உள்ளது. ஆனால் இந்துத்துவா சித்தாந்த அடிப்படையில் உருவாக்கப்பட்ட புதிய கல்வி கொள்கையை அமல்படுத்த தமிழகம் உள்ளிட்ட மாநிலங்களில் கடும் எதிர்ப்பு நீடித்து வருகிறது.

இந்நிலையில் புதிய கல்வி கொள்கையை செயல்படுத்துவது தொடர்பான ஆலோசனை கூட்டத்தை மத்திய அமைச்சர் ரமேஷ் பொக்ரியால் இன்று கூட்டியுள்ளார். இந்த கூட்டத்தில் மாநில கல்வித் துறை செயலாளர்கள் மட்டும் பங்கேற்க அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது.

ஆனால் தமிழக அரசின் சார்பாக இந்த கூட்டத்தில் கல்வித் துறை செயலாளர்கள் பங்கேற்காமல் புறக்கணித்துள்ளனர். தமிழக அரசைப் பொறுத்தவரையில் புதிய கல்வி கொள்கை தொடர்பாக மாநில கல்வி அமைச்சர்களுடனும் மத்திய அரசு கலந்து ஆலோசனை நடத்த வேண்டும் என்பது நிலைப்பாடு.

இதனை வலியுறுத்தி மத்திய அமைச்சர் ரமேஷ் பொக்ரியாலுக்கு தமிழக அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி கடிதமும் அனுப்பி இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.