பத்மா சேஷாத்ரி பள்ளி விவகாரம்.. அரசியல் ஆதாயத்திற்காக, ஜாதி பிரச்சினையாக மாற்றுகிறார்கள்- கமல்ஹாசன்

பத்மா சேஷாத்ரி பள்ளி விவகாரம்.. அரசியல் ஆதாயத்திற்காக, ஜாதி பிரச்சினையாக மாற்றுகிறார்கள்- கமல்ஹாசன்

பத்மா சேஷாத்ரி பள்ளியில் நடைபெற்ற பாலியல் சீண்டல் பிரச்சினையில் ஜாதி பிரச்சினை புகுத்தப்படுவதாக மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் குற்றம்சாட்டியுள்ளார்.

ஆன்லைன் வகுப்பு நடக்கும்போது வெறும் துண்டு மட்டும் கட்டிக் கொண்டு மாணவிகள் முன்பாக வந்து நிற்பது, ஆபாச மெசேஜ் அனுப்புவது என பல்வேறு புகார்களுக்கு உள்ளானவர் பத்மா சேஷாத்ரி பள்ளி ஆசிரியர் ராஜகோபாலன்.

சமூக வலைத்தளங்கள் வரை இந்த பிரச்சினை வெளியானதால், காவல்துறையினர் நடவடிக்கை எடுத்து அவரை கைது செய்துள்ளனர். ஆசிரியரின் அத்துமீறல் மற்றும் பள்ளியின் மெத்தனம் ஆகியவை பல அரசியல் தலைவர்களால் கண்டிக்கப்பட்டு வருகிறது.

இந்த நிலையில், கமல்ஹாசன் வெளியிட்ட அறிக்கை: ஆசிரியரே மாணவிகளிடம் அத்துமீறிய பத்மா சேஷாத்ரி பள்ளி விவகாரம் மிகுந்த அதிர்ச்சியையும் வருத்தத்தையும் ஏற்படுத்துகிறது. முன்னரே புகார் அளித்தும் பள்ளி இவ்விவகாரத்தில் போதிய கவனம் செலுத்தவில்லை எனும் குற்றச்சாட்டு நமது கல்வி நிறுவனங்களின் மீதான நம்பிக்கையைக் குலைக்கிறது.

போர்க்கால வேகத்தில் விசாரணை

தமிழக அரசு இந்த விவகாரத்தில் மிகுந்த அக்கறை செலுத்த வேண்டும். வழக்கு விசாரணைக்கு பள்ளி நிர்வாகமும் முழுமையாக ஒத்துழைக்க வேண்டும். இந்த விவகாரம் வெடித்ததை அடுத்து வேறு சில பள்ளிகளில் நிகழ்ந்த, நிகழும் பாலியல் துன்புறுத்தல் குற்றச்சாட்டுகள் அடுத்தடுத்து வெளிவந்த வண்ணம் உள்ளன. தமிழக அரசு உடனடியாக பிரத்யேக விசாரணைக் குழுவினை அமைத்து இந்தக் குற்றச்சாட்டுகளைப் போர்க்கால அவசரத்தில் விசாரிக்க வேண்டும்.

இரண்டு பெண் பிள்ளைகளின் தகப்பனாக குழந்தைகளின் பாதுகாப்பைப் பற்றிய எனது பதட்டமே 27 ஆண்டுகளுக்கு முன்னர் வெளிவந்த மகாநதி. இன்றும் அந்த பதட்டம் குறைந்தபாடில்லை. கண்ணை இமை காப்பது போல, நாம் நம் கண்மணிகளைக் காப்பாற்ற வேண்டிய பொறுப்பில் இருக்கிறோம்.

பிள்ளைகளிடம் பேசுங்க

ஆன்லைன் வகுப்பு போன்ற இணைய வசதிகளை நம் பிள்ளைகள் கையாளும்போது பெற்றோரும் மிகுந்த கவனத்துடன் சரிபார்க்க வேண்டும். பிள்ளைகள் சொல்லும் பிரச்சினைகளுக்குக் காது கொடுக்க வேண்டும். அவர்களது அச்சத்தைப் போக்கி அவர்களுக்குத் துணையாக இருக்கவேண்டும்.

இந்தப் பிரச்சனையை குறுகிய கால அரசியல் ஆதாயத்திற்காக சாதிப் பிரச்சனையாகத் திருப்பும் முயற்சி பல தரப்பிலும் நிகழ்வதைக் காண்கிறேன். குற்றத்தைப் பேசாமல், குற்றத்தின் தீவிரத்தைப் பேசாமல் பிரச்சனையை மடைமாற்றினால் அது பெரும்பாலும் குற்றவாளிகளுக்கே சாதகமாக முடிந்துவிடும் அபாயம் இருக்கிறது. குற்றமிழைத்தவர்கள் எச்சாதியினராயினும் கடுமையாகத் தண்டிக்கப்படவேண்டும். ஓர் அறிவுச்சமுகமாக நாம் அனைவருமே போராடி நீதியை நிலைநாட்ட வேண்டும். இவ்வாறு கமல்ஹாசன் கூறியுள்ளார்.