காங். சட்டசபை குழு தலைவர் பதவிக்கு போட்டா போட்டி- நாளை வாக்கெடுப்பு....?!

காங். சட்டசபை குழு தலைவர் பதவிக்கு போட்டா போட்டி- நாளை வாக்கெடுப்பு....?!



தமிழக சட்டசபையில் காங்கிரஸ் குழு தலைவர் பதவி யாருக்கு என்பதில் அக்கட்சியில் கடும் போட்டி நிலவுகிறது. இதனையடுத்து நாளை நடைபெறும் எம்.எல்.ஏக்கள் கூட்டத்தில் வாக்கெடுப்பு மூலம் சட்டசபை குழு தலைவர் தேர்ந்தெடுக்கப்பட உள்ளாராம்.

தமிழக சட்டசபை தேர்தலில் திமுக கூட்டணியில் இடம்பிடித்த காங்கிரஸ் 18 இடங்களில் வென்றது. இப்போது காங்கிரஸ் கட்சியின் சட்டசபை குழு தலைவர் யார் என்பதில் இழுபறி நீடிக்கிறது.

சட்டசபை குழு தலைவர் பதவிக்கு விஜயதாரணி, செல்வப்பெருந்தகை, பிரின்ஸ் என பலரும் மல்லுக்கட்டுகின்றனர். சட்டசபையில் சீனியர் என்ற அடிப்படையில் தமக்குதான் தர வேண்டும் என்கிறாராம் விஜயதாரணி.

தலித் பிரதிநிதி என்ற அடிப்படையில் தமக்கு தலைவர் பதவி தேவை என்கிறாராம் செல்வப் பெருந்தகை. இதேபோல் ஆளுக்கு ஒரு லாபியில் தீவிரமாக இறங்கி உள்ளனர். இந்த நிலையில் சென்னையில் நாளை காங்கிரஸ் எம்.எல்.ஏக்கள் கூட்டம் நடைபெறுகிறது.

காங். மேலிட பொறுப்பாளர் தினேஷ் குண்டுராவ், மேலிட பார்வையாளர் மல்லிகார்ஜூன கார்கே உள்ளிட்டோர் இந்த கூட்டத்தில் பங்கேற்க உள்ளனர். இக்கூட்டத்தில் ஒருமித்த முடிவு எடுக்கப்படாவிட்டால் வாக்கெடுப்பு மூலம் சட்டசபை குழு தலைவர் பதவியை தேர்ந்தெடுக்கலாம் என முடிவு செய்யப்பட்டுள்ளதாம்.

இதில் விஜயதாரணிக்கு வெற்றி கிடைக்க வாய்ப்பு உள்ளது.