ராஜீவ் கொலையாளிகள் ஏழு பேர் விடுதலை என்பது ஒரு அரசியல் விளையாட்டு....!?
பிரதமர் ராஜிவ்காந்தி கொலை தொடர்பாக கைது செய்ப்பட்ட பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேர் விடுதலை தொடர்பாக, தமிழக அமைச்சரவை மீண்டும் தீர்மானம் இயற்ற வேண்டும் என விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தொல். திருமாவளவன் வேண்டுகோள் விடுத்த்துள்ளார்.
இது தொடர்பாக தொல்.திருமாவளவன் எம்.பி. வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேர் விடுதலை தொடர்பாக குடியரசுத் தலைவர் விரைந்து முடிவெடுக்குமாறு தமிழ்நாடு அரசின் சார்பில் கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது. தமிழக அரசு இந்தப் பிரச்சினையில் காட்டியிருக்கும் அக்கறையைப் பாராட்டுகிறோம்.
ஆனால் அதே நேரத்தில் மாநில அதிகாரத்தை விட்டுக் கொடுக்காமல் இந்த விடுதலையைச் சாத்தியப்படுத்துவதற்கு தமிழக அரசு முன்வர வேண்டும். அதற்கு மீண்டும் அமைச்சரவையில் தீர்மானம் இயற்றி ஆளுநருக்கு அனுப்ப வேண்டும் என்று வேண்டுகிறோம். கடந்த அதிமுக ஆட்சியின்போது அமைச்சரவையில் தீர்மானம் இயற்றப்பட்டு ஆளுநருக்கு அனுப்பப்பட்டது. அதை சுமார் 2 ஆண்டு காலம் கிடப்பில் போட்டிருந்த ஆளுநர், சிபிஐயின் பல்நோக்கு விசாரணை முடிவடையாததைக் காரணமாகக் கூறினார்.
ஆனால், அந்த விசாரணைக்கும் 7 பேர் விடுதலைக்கும் எந்தத் தொடர்பும் இல்லையென சிபிஐ உச்ச நீதிமன்றத்தில் தெரிவித்தது. அதன்பிறகும் முடிவெடுக்காமல் தாமதப்படுத்திவந்த ஆளுநர் கடைசியில் குடியரசுத் தலைவர்தான் இதில் முடிவெடுக்க வேண்டும், எனவே அவருக்கு அனுப்பி விட்டேன் என்று கூறிவிட்டார். அப்படி அவர் அனுப்பியிருந்தால் அது சட்ட விரோதமான நடவடிக்கையாகும். மாநில அரசின் அதிகாரத்தை மீறியதாகும்.
அரசியலமைப்புச் சட்டப் பிரிவு 161 தண்டனை குறைப்புச் செய்ய மாநில அரசுக்கு முழுமையான அதிகாரம் இருக்கிறது எனக் கூறுகிறது. அது, பல்வேறு உச்ச நீதிமன்றத் தீர்ப்புகளின் மூலமாகவும் உறுதிப்படுத்தப்பட்டிருக்கிறது.இந்நிலையில், தமிழக அரசு நல்லெண்ண அடிப்படையில் குடியரசுத் தலைவரிடம் வேண்டுகோள் விடுத்திருந்தாலும், அதில் மாநில அரசின் அதிகாரத்தைப் பறித்த ஆளுநரின் நடவடிக்கையை நியாயப்படுத்துவதாக அமையும் ஆபத்துள்ளது என்பதைச் சுட்டிக்காட்டுகிறோம்.
7 பேர் விடுதலையில் தமிழக அரசுக்கு அனைத்து அதிகாரமும் உள்ளது. மாநில உரிமையை விட்டுக்கொடுத்து பதவியில் ஒட்டிக்கொண்டிருந்தது அதிமுக. அவர்களின் தன்னலம் காரணமாகவே, 7 பேர் விடுதலை இத்தனை ஆண்டுகள் தள்ளிப்போனது. அந்தத் தவறைச் சரிசெய்யவேண்டிய கடமை தற்போதைய அரசுக்கு உள்ளது.எனவே, 7 பேரையும் விடுவிப்பதாக மீண்டும் அமைச்சரவையில் தீர்மானம் நிறைவேற்றி ஆளுநருக்கு அனுப்ப வேண்டும். அவரிடமிருந்து ஒப்புதல் வரும் வரை அவர்கள் 7 பேரையும் பரோலில் விடுவிக்க வேண்டும் எனக் கேட்டுக்கொள்கிறோம். இவ்வாறு திருமாவளவன் தெரிவித்துள்ளார்.
இந்நிலையில் நேற்று ராஜீவ்காந்தி நினைவு நாளில் பேசிய தமிழ்நாடு காங்கிரஸ் கட்சித் தலைவர் கே எஸ் அழகிரி ராஜீவ் கொலை குற்றவாளிகள் 7 பேரை விடுதலை செய்வதில் எங்களுக்கு உடன்பாடு இல்லை என்று தெரிவித்துள்ளார்.
அப்படி அவர்களுக்கு உடன்பாடு இருந்திருந்தால் 2004 முதல் 2014 வரை ஒரே கூட்டணியில் ஆட்சி அதிகாரத்தில் ஒன்றாக பயணித்தபோது செய்திருப்பார்கள்.
கே எஸ் அழகிரி தைரியம் இருந்திருந்தால் நேற்று அளித்த பேட்டி தேர்தலுக்கு முன்பு அளித்திருக்க வேண்டியதுதானே அல்லது இதை அவர்கள் தங்கள் தேர்தல் அறிக்கையில் குறிப்பிட்ட போது தடுத்திருக்க வேண்டியது தானே.
அப்போது எல்லாம் அமைதியாக இருந்து விட்டு இப்போது பேசுவது என்பது அரசியல் விளையாட்டு.
சும்மா இவர்கள் காலத்துக்கும் இவர்களை வைத்து அரசியல் செய்ய முடியுமே தவிர யாராலும் இவர்களை விடுதலை செய்யவே முடியாது.
அவர்கள் 7 பேரும் கடைசி வரை ஜெயிலில் இருந்து சாக வேண்டியது தவிர அவர்களுக்கு விடுதலை என்பதே கிடையாது.

