தளர்வுகள் அற்ற முழு ஊரடங்கு மேலும் ஒரு வாரம் நீட்டிப்பு? முதல்வர் இன்று ஆலோசனை!

தளர்வுகள் அற்ற முழு ஊரடங்கு மேலும் ஒரு வாரம் நீட்டிப்பு? முதல்வர் இன்று ஆலோசனை!


தமிழகத்தில் கடந்த மே 24ம் தேதி முதல் தளர்வுகள் இல்லா முழு ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ள நிலையில், அதனை மேலும் நீட்டிப்பது குறித்து முதல்வர் முக ஸ்டாலின் அவர்களின் தலைமையில் இன்று ஆலோசனை கூட்டம் நடைபெற உள்ளது.

ஊரடங்கு நீட்டிப்பு?

தமிழகத்தில் கொரோனா நோய்த்தொற்று பரவலை தடுக்க அரசு சார்பில் பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. முதல்வராக முக ஸ்டாலின் அவர்கள் பதவியேற்றதும் பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டது. அதனை தொடர்ந்து கடந்த மே 10 முதல் முழு ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டது. ஆனால் கடந்த ஆண்டை போல் இல்லாமல் இம்முறை பல்வேறு தளர்வுகள் அளிக்கப்பட்டது. தினசரி காலை 6 மணிமுதல் 10 மணிவரை அத்தியாவசிய பொருட்கள் விற்பனை செய்யும் கடைகள் திறந்திருக்க அனுமதி அளிக்கப்பட்டது. மேலும் இறைச்சி கடைகளும் திறந்திருந்தது.

இதனால் முழு ஊரடங்கு போல் அல்லாமல் பொதுமக்களின் நடமாட்டம் அதிகமாகவே காணப்பட்டது. எனவே நோய்த்தொற்றும் கட்டுக்குள் வரவில்லை. தினசரி 35 ஆயிரத்திற்கும் அதிகமாக புதிய பாதிப்புகள் பதிவாகி வந்தது. மேலும் உயிரிழப்புகளும் அதிகரித்தது. இது தொடர்பாக ஆலோசனை நடத்திய முதல்வர் அவர்கள், மே 24 முதல் ஒரு வாரத்திற்கு எவ்வித தளர்வுகளும் இன்றி மிகத்தீவிர முழு ஊரடங்கை அமல்படுத்த உத்தரவிட்டார். இதனால் மருந்தகங்கள், ஹோட்டல்கள் தவிர அனைத்து கடைகளும் திறக்க அனுமதி அளிக்கப்படவில்லை.

மேலும் தேவையின்றி வெளியே சுற்றுபவர்களுக்கும் அபராதம் விதிக்கப்பட்டு, வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டு வருகிறது. போலீசார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு உள்ளனர். இதன் விளைவாக சில நாட்களாக பாதிப்பு எண்ணிக்கை குறைந்து வருகிறது. முழு ஊரடங்கு பலன் தருவதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். மேலும் இதனை நீட்டிக்க வேண்டும் எனவும் கோரி உள்ளனர். இந்நிலையில் முதல்வர் முக ஸ்டாலின் அவர்கள் இன்று முக்கிய ஆலோசனையில் ஈடுபட உள்ளார்.

அதில் ஏற்கனவே அமலில் உள்ள தளர்வுகள் அற்ற முழு ஊரடங்கை மேலும் நீட்டிப்பது குறித்து ஆலோசிக்கப்பட்டு உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. மருத்துவம், வருவாய், பொதுத்துறை மற்றும் காவல்துறை அதிகாரிகளுடன் காலை 11 மணி அளவில் முதல்வர் ஆலோசனை நடத்துகிறார். தலைநகர் சென்னையில் கொரோனா பரவல் குறைந்து வரும் நிலையில், பிற மாவட்டங்களில் அதிகரித்து வருகிறது. அதுமட்டுமின்றி தேவைப்பட்டால் முழு ஊரடங்கு மேலும் ஒரு வாரம் நீட்டிக்கப்படும் என முதல்வர் செய்தியாளர்கள் சந்திப்பில் நேற்று தெரிவித்து இருந்தது குறிப்பிடத்தக்கது.