ஊரடங்கு நீட்டிப்பு.. ரூ.20 லட்சம் கோடி நிவாரண பேக்கேஜ்.. அறிவிப்பு

ஊரடங்கு நீட்டிப்பு.. ரூ.20 லட்சம் கோடி நிவாரண பேக்கேஜ் அறிவிப்பு



பொருளாதார முன்னேற்றத்துக்காக 20 லட்சம் கோடி மதிப்புள்ள நிதி பேக்கேஜ் அறிவிக்கப்படுவதாகவும், நாட்டில் மறுபடியும் ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்படும் என்றும் பிரதமர் நரேந்திர மோடி இன்று அதிரடி அறிவிப்புகளை வெளியிட்டார்.


நாடு முழுவதும், கொரோனா வைரஸ் பாதிப்பிற்கு எதிராக, மூன்றாவது ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ளது. மே 3ஆம் தேதி முதல் மே 17ஆம் தேதி வரை இந்த ஊரடங்கு உத்தரவு அமலில் இருக்கும்.


இந்த நிலையில், நேற்று அனைத்து மாநில முதல்வர்களுடன் வீடியோ கான்பரன்ஸ் மூலமாக மோடி, ஆலோசனை நடத்தினார். இந்த நிலையில்தான், பிரதமர் மோடி இன்று இரவு 8 மணியளவில் நாட்டு மக்களிடம் தொலைக்காட்சியில் உரையாற்றினார். சுமார் 36 நிமிடங்கள் அவர் உரையாற்றினார்.


கொரோனா வைரஸ் பாதிப்பிற்கு பிறகு, அவர் நாட்டு மக்களிடம் ஆற்றிய ஐந்தாவது உரை இதுவாகும். அப்போது அவர் கூறியதன் முக்கிய அம்சங்கள் இவைதான்: கொரோனா வைரஸ் பாதிப்பு உலகத்திற்கு பெரும் நாசம் விளைவித்துள்ளது. உலகம் முழுவதும் 3 லட்சம் பேர் உயிரிழப்பதாக வந்திருக்கக்கூடிய தகவல் வேதனை அளிக்கிறது.


நமது நாடும் பல இன்னுயிர்களை இழந்துள்ளது. ஆனால், இந்த வைரசிடம் மனிதகுலம் தோல்வி அடையாது. ஒரு பக்கம் நம்மை நாமே பாதுகாத்துக் கொள்வதோடு, மற்றொரு பக்கம் பொருளாதார ரீதியாக முன்னேற வேண்டும். உலகம் முழுவதையும் ஒரே குடும்பமாக நினைப்பது இந்தியாவின் குணம். எனவே இந்தியாவின் முன்னேற்றம் என்பது உலகத்திற்கும் பலனளிக்கும்.


21ம் நூற்றாண்டு இந்தியாவின் நூற்றாண்டாக மாற்றப்பட வேண்டும். இந்த வேதனையான காலகட்டத்தை நாம் சாதனைகளை உருவாக்க பயன்படுத்த வேண்டும். ஏற்கனவே இந்தியாவில் தயாரிக்கப்படும் பல மருந்துகள் வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்பட்டு பல உயிர்களை காப்பாற்றி வருகிறது குறிப்பிடத்தக்க அம்சமாகும்.


நமது நாட்டின் ஐந்து தூண்கள் முக்கியமானவை. அதில் ஒன்று பொருளாதாரம், அடுத்தது உள்கட்டமைப்பு, தொழில்நுட்பத்தால் இயங்குவது, செயல் திறன் மிக்க மக்கள், பொருட்களுக்கான தேவை ஆகிய இந்த ஐந்தும் மிக முக்கியமானது. இதற்கு எந்த விதத்திலும் பாதிப்பு ஏற்பட்டு விடக்கூடாது என்பதற்காக மத்திய அரசு விரைவில் 20 லட்சம் கோடி மதிப்புள்ள பொருளாதார நிவாரண நிதி வழங்கும். இந்த நிதியை பயன்படுத்தி கொண்டு வலிமையான இந்தியாவை உருவாக்க முயற்சி முன்னெடுக்கப்படும்.


இந்த நிதித் தொகுப்பு மொத்த உள்நாட்டு உற்பத்தியில் ஏறத்தாழ 10 சதவீதம் என்ற அளவுக்கு பெரிய நிதித் தொகுப்பாக இருக்கும். சிறு, குறு தொழில் முனைவோர், விவசாயிகள் உள்ளிட்ட பல துறையினருக்கும் இந்த நிதி ஊக்கமளிக்கும். உள்ளூர் சந்தைகளை வலுப்படுத்துவது, உற்பத்தி மற்றும் வினியோக சங்கிலியை பலப்படுத்துவது உள்ளிட்டவற்றுக்கு இது பயன்படும். உள்நாட்டில் தயாரிக்கப்படும் பொருட்களை வாங்குவதற்கு ஒவ்வொரு இந்தியனும் உறுதி ஏற்க வேண்டிய காலகட்டம் இது.


தற்சார்பு பொருளாதாரம் நமது பலம். தற்சார்பு என்பது சுயநலம் கிடையாது. இந்தியா முன்னேற்றம் மற்றும் தற்சார்பு அடைந்தால் உலக நாடுகள் ஒவ்வொன்றுக்கும் அது பலனை அளிக்கும். இந்த வைரஸின் தாக்கம் நீண்ட நாட்களுக்கு நீடிக்க கூடும் என்று நிபுணர்கள் எச்சரிக்கிறார்கள். எனவே ஒரு பக்கம் நம்மை பாதுகாத்துக் கொள்வதோடு, மற்றொரு பக்கம் பொருளாதாரத்தில் முன்னேறிச் செல்ல வேண்டும்.


இந்தியா நான்காவது கட்ட ஊரடங்கு அமல்படுத்த போகிறது. அது குறித்த அறிவிப்பு மே 18ஆம் தேதிக்கு முன்பாக வெளியிடப்படும். இதுவரை இருந்த ஊரடங்கை காட்டிலும் இது மாறுபட்டதாக இருக்கும். அது தொடர்பான அனைத்து விவரங்களும் மே 18ம் தேதிக்கு முன்பாக அறிவிக்கப்படும். இவ்வாறு பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்தார்.


மோடி இன்று தனது உரையில், ஒரு பக்கம் கொரோனா வைரஸில் இருந்து பாதுகாத்துக்கொள்ள ஊரடங்கு உத்தரவை நீட்டிப்பதோடு மற்றொரு பக்கம் பாதிக்கப்பட்டுள்ள பொருளாதாரத்தை மீட்டெடுப்பதற்கு நிதி பேக்கேஜ் அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.


இவை இரண்டு குறித்தும் விரிவான விளக்கம் பின்னர் மத்திய அரசால் வெளியிடப்படும் என்று தெரிகிறது. ஒரே நேரத்தில் இரண்டு விஷயங்களையும் கையாளுவதற்கான முயற்சியை மத்திய அரசு எடுத்துள்ளது முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது.